பக்கம் எண் :

41

Kachchik Kalambagam

நிமல வாழ்வினைப் புகழ்ந்தடைதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்


மலர்க்கஞ்சன் சிரமிழந்தான்; கோப்புரக்க
      மலையெடுத்தான், வன்றி யானான்;
சிலைக்கரும்பன் உருவழிந்தான; சேணியங்கும்
      இருகதிருஞ் சிதைந்து நொந்த;
கலக்கரிய பகைப்புரங்கள் நீறுபட்ட
      கச்சியே கம்பர் மேன்மை
நிலைப்படவா யாமையினன் றோமனமே
      புகழ்ந்தடைதி நிமல வாழ்வே.                     (9)

(இ-ள்.) மலர்க்கஞ்சன் - தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமன், சிரம் இழந்தான் - ஐந்து தலைகளில் (நடுத்) தலையை இழந்தான், கோ புரக்க - பசுக்களைப் பாதுகாக்க, மலையெடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமால், வன்றியானான் - பன்றி ஆனான், சிலைக் கரும்பன் - கருப்பு (கரும்பு) வில்லினையுடைய மன்மதன், உருஅழிந்தான் - தன் வடிவு அழிந்தான். சேண் இயங்கும் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும், இரு கதிரும் - ஞாயிறுந் திங்களும், சிதைந்து - (தக்கனுடைய வேள்வியில்) அழிந்து, நொந்த - நொந்தன, கலக்கு அரிய - கலங்குத லில்லாத, பகைப் புரங்கள் - பகைவர்களுடைய முப்புரங்கள், நீறுபட்டன - அழிந்தன, கச்சி ஏகம்பர் மேன்மை - திருக்கச்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரது மேன்மையானது, நிலைப்பட - நிலையாக, வாயாமையின் அன்றோ - கிடைக்காமையினாலன்றோ (ஆகையால்) மனமே - மனமே, புகழ்ந்து - அவரைப் புகழ்ந்து, நிமல வாழ்வு - அழுக்கில்லாத் தூய வாழ்வை, அடைதி - அடைவாய். மலர்க் கஞ்சன் - கஞ்சமலரன் என விகுதி பிரித்துக் கூட்டுக.  கஞ்சம் - நீரில் தோன்றுவது எனக் காரணப் பெயர். சிலைக் கரும்பன் - கரும்புச் சிலையன் என விகுதி பிரித்துக் கூட்டுக.

ஏகம்பர் மேன்மை நிலையாகக் கிடைக்காமையினாலன்றோ பிரமன் முதலாயினோர் இவ்வாறாயினர்.  ஆகையால் மனமே அவனைப் புகழ்ந்து நிமல வாழ்வை அடைதி. நொந்த, நீறுபட்ட - அன் சாரியையின்றி வந்த வினைமுற்றுக்கள்.

நிலைப்பட - நிலையாக, வாயாமையின் - கிடைக்காமையினால்.

கலக்கு என்பது கலங்கு என்பதன் வலித்தல் விகாரம்.