பக்கம் எண் :

65

Kachchik Kalambagam


அறுசீர் ஆசிரிய விருத்தம்


      மழுவேந்து வலக்கரத்தர், மழை யேந்து
            சடைச்சிரத்தர், வான்பு ரத்தர்,
      விழவாங்கு பூதரத்தர், வேளெரித்த
            மாவுரத்தர், ஆத ரத்தர்,
      தொழவாழு மாதிரத்தர், நடமாடும்
            எரிசுரத்தர், தூவ ரத்தர்,
      குழையாடு செவியரத்தர் கச்சியெனு
            மாகரத்தர் குணக்குன் றாரே.                       (33)


(இ-ள்.) மழு ஏந்து - மழுப்படையை (எரியிருப்புப் படையை)த் தாங்கிய, வலம் கரத்தர் - வலக்கையை உடையவர், (வல்லமை பொருந்திய கையை உடையவருமாம்) மழை ஏந்து சடை சிரத்தர் - மேகம் தங்கிய சடையோடுகூடிய தலையை உடையவர் (கங்கையைத் தாங்கும் சடையோடுகூடிய தலையையுடையவருமாம்), வான் புரத்தர் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவர் (சிதாகாச இடத்தர்), விழவாங்கு பூதரத்தர் - தனக்கு அடங்க வளைத்த மேருமலையை உடையார், வேள் எரித்த - மன்மதனை எரித்த, மா உரத்தர் - சிறந்த மன வலிமையை யுடையவர், ஆதரத்தர் - (எல்லா உயிர்களுக்கும்) ஆதாரமாகக் கருணை பொருந்தி இருப்பவர், (எல்லா உயிர்களிடமும் அன்புடையவர்) தொழ வாழும் - (எல்லா ஆன்மாக்களும்) தொழும்படி வாழும், மாதிரத்தர் - (கயிலாய மலையை உடையவர், நடமாடும் எரிசுரத்தர் - கூத்தாடும் அனலை வீசுகின்ற காட்டை உடையவர், தூ வரத்தர் - தூய்மை உள்ள வரத்தை அளிப்பவர், குழையாடு செவியர் அத்தர் - குழைகள் அசைகின்ற செவியை உடையவராகிய தலைவர், கச்சியெனும் ஆகரத்தர் - காஞ்சி என்னும் உறைவிடத்தை உடையார். (அவர் யாரெனில்), குணக்குன்றாரே - எண் குணங்களாகிய மலையாரான ஏகாம்பரநாதரே.

வான்புரத்தர் - தேவர்களைப் பாதுகாப்பவர் எனினுமாம். வான் ஆகுபெயர்.

பூதரத்தர் என்புழி, பூதரம், மலை.  விழவாங்கு என்ற குறிப்பால் மேருமலையை உணர்த்திற்று.

ஆதரத்தர், ஊர் தோறும் இருப்பவர் எனினும் அமையும். (ஆதரம் - ஊர்)

மாதிரத்தர் - திக்குகளை உடையவர் எனினுமாம்.

எரிசுரம் - பேரூழிக் காலத்தில் நெருப்பு நெருங்கிப் பிறங்க எரிகின்ற காடு.

தூவரம் - தூய்மை வரும்.

அத்தர் - அர்த்த பாகத்தை உடையவர்.

அத்தம் - சிவப்பு; செந்நிறத்தை உடையவர்.

அத்தர் - தலைவர்; அடைக்கலம் அளிக்கும் கையை உடையவர்.

குணக்குன்று - உருவகமாம். எண்குணமாவன: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல் முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன.