பக்கம் எண் :

72

Kachchik Kalambagam


பாண்

நேரிசை ஆசிரியப்பா


     கலன்பணி உடைதோல் கலம்பலி ஓடுகொண்
      டிலந்தொறும் இரந்து ணிறைதரும் ஒற்ற!
      மலைவளர் காதலி மங்கள வல்லி
      சிலைவேட் களித்த சிற்சுக மங்களை
5     இழைவகிர் நுண்ணிடை யேந்திழை பங்கன்
      பழைய கள்வன் பண்பினை ஓர்ந்தேன்
      பாணனே! நின்னைப் பண்ணிசை கூட்டி
      வீணையிற் பாடி விழைவை ஊட்டித்
      தன்வயப் படுத்தத் தந்திரம் கற்பித்
10    தென்வயிற் செலுத்தும் இங்கிதம் தோன்றப்
      பாடினை; இன்புறப் பாடல்கேட் டாங்குக்
      கூடிய கொற்றவன் குணமறி வாயோ?
      மலைப்பெணந் தரியை மகிழ்வாய் மணந்தும்
      அலைப்பெணைச் சடையில் அமைத்த தேன்உரை
15    கம்பை நதியயல் காம நயனியாம்
      அம்பை அருச்சனை ஆற்றல்கண் டவளை
      உள்ளங் கலங்க ஓங்குநீர் அழைத்துக்
      கள்ளப் புணர்ச்சி கலந்து வடுப்பட்
      டின்னமும் மாறா தேய்ந்த தன்மை
20    என்னவென் றுரைப்பன் இதுவலா தொருநாள்
      தாரு வனஞ்செலீஇத் தாபதப் பன்னியர்
      தெருமரல் உற்றுப் பருவரல் எய்தக்
      கோவண நீத்துத் தீவணம் பூத்தம்
      மின்னிடை யாருடன் விருப்புறப் பேசித்
25    துன்னிய தன்மை சொல்லுந் தகைத்தோ!
      வனிதையர் மயங்க வளைகொணர்ந் தன்று
      மதுரையில் வந்த வசையே சாலும்
      சாலும் பாண! சாலும் பாண!
      யாதும் கேளேன் யான்இனி மயங்கேன்
30    போகென உரைத்தும் போகாய் அந்தோ!
      அன்னை யறியா தணைந்தேன் அவனைப்
      பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன்;
      அகலுதி பாணா! அனையறி வாளேல்
      தகரும் நின்சிரம்; தமரும் வெகுளுவர்
35    நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை
      வஞ்சகன் அறிய வழுத்துவை பாணா!
      மறந்தேன் அன்னையை; மன்னனைப் புணர்ந்து
      சிறந்தனம் என்றே திகைத்தேன்; இத்துணை
      பட்டது சாலும் பாணனே! மடவார்க்
40    கிட்டது தானே இயலும் பரமனை
      வெறுத்தலும் வீணே; விழைவு
      பொறுத்தலும் இலன்; இனிப் புரிவனற் றொண்டே.             (40)

            1 - 4. கலன்பணி ... ... மங்களை.

(இ-ள்.)  கலன் பணி - பாம்பாகிய அணிகலனையும், உடைதோல் - யானைத் தோலாகிய உடையையும், ஓடு - மண்டை ஓடாகிய, பலிக் கலம் - பலியேற்கும் கலத்தையும், கொண்டு - கொண்டு, இலந் தொறும் - இல்லந்தோறும், இரந்து உண் - இரந்து உண்ணுகின்ற (ஏற்று உண்கின்ற), இறை தரும் ஒற்ற - இறைவன் அனுப்பிய தூதனே (பாணனே) மலைவளர் காதலி - பனிமலை யரையன் மகளாகியும், மங்கள வல்லி - மங்களகரமான வல்லிக்கொடி போன்றவளும், வேட்கு சிலை அளித்த - மன்மதனுக்குக் கரும்பு வில்லைக் கொடுத்த, சிற்சுக மங்களை - அறிவுமிக்க கிளிபோன்ற மங்கள வடிவமுள்ளவளும்,

            5 - 9.  இழை வகிர் ... ... கற்பித்(து)

(இ-ள்.) வகிர் இழை - பிளவு செய்த நூல்போன்ற, நுண்ணிடை ஏந்து இழை பங்கன் - நுட்பமாகிய இடையையும் கலன் தாங்கிய ஆபரணங்களையும் உடையாளாகிய பார்வதியை இடப்பாகமாகிய ஒரு பங்கிலே கொண்டவன் (சிவன்), பழைய கள்வன் - பழைமையாகிய திருடனாவான், பண்பினை ஓர்ந்தேன் - அவனது நற்குண நற்செய்கைகளை உணர்ந்தேன், பாணனே - பாடுந் தொழிலுடையவனே, நின்னை - உன்னை, பண்ணிசை கூட்டி - பண்ணோடு கூடிய இசையைச் சேர்த்து, வீணையிற் பாடி - வீணையால் பாடி, விழைவை ஊட்டி - விருப்பத்தை உண்டாக்கி, தன்வயப் படுத்த - தன்வசமாக்க, தந்திரம் கற்பித்து - உனக்குச் சூழ்ச்சி கற்பித்து,

            10 - 14. என்வயிற் ......... உரை

(இ-ள்.) என் வயிற் செலுத்தும் - என்னிடத்து அனுப்பிய, இங்கிதம் தோன்ற - குறிப்பு வெளிப்பட, இன்புறப் பாடல் பாடினை - இன்பம் உண்டாகும்படி பாடலைப் பாடினாய், கேட்டு - அதனைக் கேட்டு, ஆங்கு - அப்பொழுதே (அவன் குணமறிந்தது போல), கூடிய கொற்றவன் - என்னைக் கூடிய தலைவரது, குணம் அறிவாயோ - குணத்தை நீ அறிவையோ, மலைப் பெணை அந்தரியை - மலையரையன் புதல்வியாகிய அந்தரியை (பார்வதியை), மகிழ்வாய் - மகிழ்ச்சியோடு, மணந்தும் - கலந்தும், அலைப் பெணை - அலைகளையுடைய கங்கையை, சடையில் - சடையினிடத்து, அமைத்த தேன் - வைத்ததேன், உரை - சொல்லுவாய்,