அறுசீர்
ஆசிரிய விருத்தம்
துன்னிமித்தங்
கண்டுமஞ்சா தொருதுணையும் பிணையாது
துனைந்து சென்று
பொன்னிமித்தஞ்
சிலைசுமந்து முறுவலித்துப் புரமெரித்த
புரைதீர் எந்தாய்!
என்னிமித்தம்
என்னகத்தே குடிபுகுந்தாய் திருக்கச்சி
இறைவா! ஏழை
தன்னிமித்தந்
திருவுள்ளங் கனிந்ததன்றித் தகுதிமற்றென்
தருக்கி னேற்கே.
(63) |
(இ-ள்.)
துன் னிமித்தங் கண்டும் - கெட்ட சகுனம் நேரிடப் பார்த்தபொழுதும், அஞ்சாது - பயப்படாது,
ஒரு துணையும் பிணையாது - ஒருவரையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளாமலும், துனைந்து சென்று
- விரைந்து போய், பொன் நிமித்தஞ் சிலை - பொன்னால் ஆகிய மேருமலையை, சுமந்து
- வில்லாகத் தாங்கியும், முறு வலித்து - (அவ் வில்லை வளைக்காமலேயே) வெறும் புன்சிரிப்புச்
செய்து, புர மெரித்த - (அச்சிரிப்பிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால்) திரிபுரத்தை
அழித்த, புரைதீர் - (திரிபுரத்தாரால் மக்களுக்கு ஏற்பட்ட) துன்பத்தைத் தீர்த்த,
எந்தாய் - என் தந்தையே, என்னிமித்தம் - என்னிடத்துக் கண்ட எத்தகுதி காரணமாக,
என் அகத்தே குடி புகுந்தாய் - என் மனத்திலே குடியேறினாயோ (அறியேன்), திருக்கச்சி
இறைவா - திருக்கச்சியில் எழுந்தருளிய இறைவனே!, ஏழைதன் நிமித்தம் - ஏழை எளியேனாகிய
என்பொருட்டு, திரு உள்ளம் கனிந்ததன்றி - (நீயே ஒன்றும் எதிர்பாராமல்) திருவுள்ளம்
உருகி அன்பு பாராட்டினதல்லாமல், தருக்கினேற்கு - (உன் அன்பைப் பெற்றதால் உற்ற)
செருக்கை உடைய எனக்கு, தகுதி மற்றென் - உன் அன்பைப் பெறுதற்குரிய தகுதி எளியேனிடத்துண்டான
எளிமையேயன்றி வேறு என்ன உண்டு! (இறைவன் அன்பைப் பெறுதற்கு அவன்பால் காட்டும் பணிவுடைமையாலாகும்
எளிமையே யன்றி வேறில்லை என்றபடி.)
துர்நிமித்தம் - சிவபிரான் திரிபுரம் எரிக்கத் தேரில்
அடியிட்டு ஏறினபோது, அத்தேர் அச்சு முறிந்து வீழ்ந்தது. (அவ்விடம் அச்சிறு பாக்கம்,
அச்சிறபாக்கம், அச்சிரவாக்கம் என வழங்குகிறது.)
பொன்னிமித்தமாக மலையைச் சுமந்து என்பது சொற் போக்குரை.
(பொன் நிமித்தம் - பொன்னாகிய கூலி பெறும் பொருட்டு).
எந்தாய் - எந்தை என்பதன் விளி; எந்தை என்பது என்
தந்தை என்பதன் மரூஉ. என் தாய் என்றதன் மரூஉ எனினும் அமையும்.
“தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும், அச்சு முறிந்ததென்றுந்தீ
பற, அழிந்தன முப்புர முந்தீ பற” (திருவாசகம், திருவுந்தியார் 3).
புரமெரித்த எந்தாய்; புரை தீ ரெந்தாய் எனத் தனியே
கூட்டுக. தீ ரெந்தாய் என்பது பிறவினைப் பொருட்டாகிய வினைத்தொகை. |