பக்கம் : 100
 
மிருதுவான கொங்கைகளைத் தழுவ; ததைந்ததார் - அதனால் நெருக்குண்ட மாலைகளின்
மணம்; கமழ நின்றன - வீசுமாறு அமைந்து விளங்கின. (எ-று.)

வானவர் எனப் பருகுதற்கும் புல்லுதற்குமுரிய எழுவாய் அவாய் நிலையான் வருவித்துக்
கொள்க. வானவரும் அவர்தம் மங்கையரும் பொழிலில் இன்பம் நுகர்ந்து இனிது
திளைக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் தழுவும்போது அவர்கள் அணிந்துள்ள
மாலைகள் நெருக்குண்டு மணத்தை வெளிப்படுத்துகின்றன. அந்த நறுமணம்
பொழிலகமெல்லாம் வீசா நின்றது.
 

( 4 )

.பொழிலிற் குளிர்ச்சி

123 கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே.
 

     (இ - ள்.) துளரும் சந்தனச் சோலைகள் ஊடு எலாம் - மணத்தை
வெளிப்படுத்துகின்ற சந்தனப் பொழில்களினுள்ளேயெல்லாம்; சூழ் ஒளி கிளரும் - தம்மைச்
சூழாநின்ற திருமேனி ஒளி விளங்குகின்ற; கின்னரதேவர் - கின்னர வகுப்பைச்சேர்ந்த
தேவர்கள்; தம் - தங்களுடைய; வளரும் பூண் முலையாரொடு வைகலால் - வளருகின்ற
அணிகலன்களையணிந்த கொங்கைகளையுடைய மங்கையர்களொடு தங்கியிருத்தலால்;
தெய்வ நறுங் குளிர் நாற்றமே நளிரும் - தெய்வத்தன்மை பொருந்திய நல்ல குளிர்ச்சி
பொருந்திய மணமே எப்பொழுதுங் குளிர்ந்து பரவா நிற்கும். (எ - று.)

பொழில்களுக்கள் எல்லாம் கின்னரர்கள், தம் மாதர்களோடு இனபந் துய்த்திருத்தலால்
அங்கு எப்பொழுதும் இனிய குளிர்ந்த மணம் வீசிக்கொண்டிருக்கும் என்க. கின்னரர்
எனப்பெறுவோர் குதிரை முகமும் மனிதவுடலும் படைத்த ஒரு தெய்வச் சாதியினர்.
 

( 5 )

.வாடையின் வருகை

124 மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்