பக்கம் : 1005
 

     நங்கையின் குறிப்பறிந்து, உழைக்கல மகளிர் மாலையாகிய தளையை விட்டனராக,
விதூடகனும், அன்போடே தேவி முன்னர் வந்து, கோலங் கொண்டு பாடலோடே ஆடல்
செய்தான் என்க.
 

(487)

 

விதூடகன் பாடிக்கொண்டு ஆடுதல்

வேறு

1618.  ஓடு மேமன மோடுமே
கூடு 1மேதணி கோதையாய்
காடு சேர்கனி காண்டொறும்
ஓடு மேமன மோடுமே.
 
     (இ - ள்.) காடு சேர் கனி காண்டொறும் - இப்பொழிலிடத்தே உள்ள இனிய
கனிகளை யான் காணுந்தோறும், ஓடுமே மனம் ஓடுமே - அக்கனிகளிடத்தே தாவித்தாவி
என் மனம் ஓடா நிற்கும், தணி கோதையாய் - ஊடல் தணிந்துள்ள மலர் மாலையையுடைய
பெருந்தேவியே, கூடுமே - அவ்வாறு கனிகடோறும் ஓடிவீழ்ந்த மனம் மீண்டும் அவற்றைப்
பறித்துத் தருதி என என்பால் வந்து கூடா நிற்கும், ஓடுமே மனம் ஓடுமே - நான் அதற்கு
முயலுமுன் மீண்டும் அக்கனிகளிடத்து அம்மனம் ஓடாநிற்கும்,
ஏ எல்லாம் அசைகள், (எ - று.)

     ஊடல் தணிந்துள்ள நங்காய்! கனிகள் காண்டொறும் என் மனம் அவற்றின் பால்
ஓடும், மீண்டும் என்னை வந்து கூடா நிற்கும் என்றான் என்க.
 

(488)

 
 
1619  ஊறு மேயெயி றூறுமே
வீறு சேர்விரி கோதையாய்
சேறு சேர்கனி காண்டொறும்
ஊறு மேயெயி றூறுமே.
 
     (இ - ள்.) வீறு சேர் விரி கோதையாய் - சிறப்பு மிக்க அலர்ந்த, மாலையையுடைய
பெருந்தேவியே, சேறுசேர் கனி காண்டொறும் - இனிய சாறுமிக்க இக்கனிகளை யான்
காணும் பொழுதெல்லாம், ஊறுமே எயிறு ஊறுமே - என் வாய்தான் ஊற்றெடுத்துப்
பெருகா நிற்கும், ஊறுமே எயிறு ஊறுமே - என்வாய் ஊற்றெடுத்துப் பெருகாநிற்கும்,
(எ - று.)

     கோதையாய்! கனி காண்டொறும் என் எயிறு ஊறாநிற்கும் என்றான் என்க.

(489)


     (பாடம்) 1மோதணி.