பக்கம் : 101
 
  தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே.
 

     (இ - ள்.) மங்குல் வாடை - முகில் அளாவிய வாடையானது; மந்தார் வனமீ துழாய்
- மந்தாரத் தருமிக்க காட்டின் மேல் வீசி அதனைத்துழாவி; பொங்கு தாதொடு - அதன்கட்
பொங்கிய மகரந்தப் பொடியோடு; பூமதுக் கொப்பளித்து - அம்மந்தார மலரினுள்ள
தேனையும் அளைந்து; அங்கராகம் அளாய் - பிற நறுமணப் பொருளின்மீதும் படிந்து;
அரமங்கையர் - தேவமாதர்களது; கொங்கைவாரிகள் மேல் - கொங்கைகளாகிய செண்டு
வெளிகளின்மேல்; குதிகொள்ளும் - குதித்தலைச் செய்யும். (எ - று.)

     துழாவிக் கொப்பளித்து அளாவி நறுமணத்தோடு வருகின்ற குளிர்
வாடையானது அரமங்கையர்களின் கொங்கைகளையே செண்டு வெளியாகக் கொண்டு
குதித்தலைச் செய்யும் என்க. செண்டுவெளி - ஆடுமிடம். மந்தாரவனம் - மந்தார் வனம்
என அகரம் கெட்டுநின்றது. மந்தாரவான் என்றும் வந்தார்வன என்றும் பாடம். மந்தாரம் -
ஐந்தருவினொன்று, மீ - மேல். துழாய் - துழாவி. அங்கராகம் - உடற்பூச்சிற்குரிய நறுமணப்
பொருள்கள். வாரி - யானை கட்டுமிடமுமாம்.
 

( 6 )

தழைப்படுக்கை

125. தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கைமேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் 1வைகுவர் வைகலே.
 

     (இ - ள்.) தேன் அகத்து உறையும் - தேனானது உள்ளே பொருந்திய; செழும் -
செழிப்புமிக்க; கானக சந்தன தழையின் - காட்டிடத்துத்தோன்றிய சந்தனக்குழையினாலாய;
கமழ் சேக்கைமேல் - மணம் வெளிப்படும் படுக்கையின்மேல்; ஊனகத்தவர் போகம்
உவந்து - மானிடர் நுகரும் நுகர்ச்சியைத் தாமும் நுகரவிரும்பி; வானகத்தவர் - தேவர்கள்,
வைகல் வைகுவர் - அம்மலையின்மேல் நாடோறும் வந்து தங்குவர். (எ - று.)
 


     (பாடம்) 1. வைகிய வைகலே.