பக்கம் : 1010
 

பாரிசாதமணமகனை ஒப்பனை செய்தல்

1627. எந்திர மிழிந்த தாரை
     யருவிநீ ரினிதி னாட்டிக்
கந்தெனத் திரண்ட திண்டோட்
     கனகசா லங்கள் காட்டிப்
பைந்தழைப் பொழிலுக் கெல்லா
     மரசெனப் பட்டஞ் சேர்த்தி
அந்தளிர்க் கொம்பர் தோறு
     மணிபல 1வணிந்தா ரன்றே.
 
     (இ - ள்.) எந்திரம் இழிந்த தாரை அருவிநீர் இனிதின் ஆட்டி - நீர்விசிறும்
பொறியாலே இறங்குதலையுடைய தாரையாகிய அருவியினுடைய நீராலே அப்பாரிசாத
மணமகனை இனிதாக நீராட்டி, கந்து எனத் திரண்ட திண்டோள் - தூண்களைப்போலத்
திரண்டுள்ள கிளைகளாகிய திண்ணிய தோள்களிடத்தே, கனகசாலங்கள் - பொன்னாலாய
அணிகலன்களை, காட்டி - அணிந்து, பைந்தழைப் பொழிலுக்கு எல்லாம் அரசு - பசிய
தழைகளை யுடைய பூம்பொழில்கள் எல்லாவற்றிற்கும் இப்பாரிசாதம் அரசனாகும், எனப்
பட்டம் சேர்த்தி - என்று ஒரு பட்டத்தையும் சூட்டி, அந்தளிர்க் கொம்பர் தோறும் -
அழகிய தளிர்கள் நிறைந்த கொம்புகளில் எல்லாம், அணிபல அணிந்தார் அன்றே -
அணிகலங்கள் பலவற்றையும் சூட்டினார், (எ - று.)

     எந்திரம் - நீர்வீசும் இயந்திரம் எனினுமாம்.

     நம்பியின் பணிபெற்ற மகளிர் அப்பாரிசாதத்தைச் சிவிறித் தாரையாலே அருவி
நீராட்டிக் கிளைகளிலே பொன்னணிகலன் பூட்டிப், பொழிலுக் கெல்லாம் அரசு எனப்
பட்டம் சூட்டிக், கொம்பர்தோறும் அணிகலன் அணிந்தனர் என்க.

 (497)

 
காமவல்லி மணமகளை ஒப்பனை செய்தல்
1628. கன்னியங் காம வல்லிக்
     கனங்குழை மடந்தை தன்னை
மன்னவன் றேவி மார்கண்
     மணவினைக் கோலஞ் செய்து
பின்னத னோடு சேர்த்திப்
     பெருகிய களிய ரானார்
இன்னகைப் புதல்வர் செல்வம்
     யாவரே யினிதென் னாதார்.
 
     (இ - ள்.) கன்னி அம் காமவல்லி - கன்னிமையுடைய அழகிய காமவல்லி என்னும்,
கனங்குழை - கனவிய குழையினையுடைய, மடந்தை தன்னை - நங்கையை, மன்னவன்
தேவிமார்கள் - திவிட்டனுடைய மனைவிமார்கள், மணவினைக் கோலம்செய்து -
திருமணவினைக்குரிய ஒப்பனை பலவும் செய்து, பின் அதனோடு சேர்த்தி - பின்னர்
அப்பாரிசாத மணமகனோடு கூட்டி, பெருகிய களியர் ஆனார் - மிக்க மகிழ்ச்சியுடையர்
ஆயினார், இன் நகை புதல்வர் செல்வம் - இனிய முறுவலையுடைய மகார்கள் செல்வம்
எய்துதலை, யாவரே இனிது என்னாதார் - யார் தாம் இனிதாகக் கருதாதார் உளர், (எ - று.)
 
 

     (பாடம்) 1 வணிவித்தானே.