பக்கம் : 1011
 

     புதல்வர் செல்வம் - புதல்வர்கள் எய்தும் செல்வம், புதல்வராகிய செல்வ
மெனினுமாம்.

     பாரிசாதத்தை ஒப்பனை செய்த மகளிர், காமவல்லிக் கன்னியையும் கோலஞ் செய்து
அதனோடே புணர்த்திப் பெரிதும்  மகிழ்வாராயினர்; புதல்வர் செல்வத்தை
யாரே இனிதென்று மகிழாதார் என்க.

 (498)
 
பொழில் விளையாட்டு
1629. மாதரார் மனத்தி னுள்ளு
     மணிவண்ண னினைப்பி னுள்ளும்
காதலுஞ் செறிந்த தாகக்
     காமனு முழைய னாகப்
போதலர் பருவச் சோலைப்
     பொழினல நுகரும் போழ்தில்
ஓதநீர் வண்ண னங்கோ
     ருபாயத்தா லொளிக்க லுற்றான்.
 
     இதுமுதல் 40 செய்யுள்கள் ஒரு தொடர்

     (இ - ள்.) மாதரார் மனத்தின் உள்ளும் - அம்மகளிர்களின் நெஞ்சத்தூடேயும்,
மணிவண்ணன் நினைப்பின் உள்ளும் - திவிட்ட நம்பியின் எண்ணத்தூடேயும், காதலும்
செறிந்ததாக காதற்காமம் மிக்கதாக, காமனும் - காமவேளும், உழையனாக - இவர்
பக்கலிலே நின்று தன் தொழிலைச் செய்ய, போது அலர் பருவச்சோலை - மலரும்
பருவத்தை யுடைய அச்சோலையாகிய, பொழில்நலம் நுகரும்போழ்தில் - பூம்பொழிலின்
அழகு மணம் முதலிய நன்மைகளை நுகருகின்றபொழுது, ஓதநீர் வண்ணன் -
கடல்வண்ணனாகிய திவிட்டநம்பி, ஆங்கு ஓர் உபாயத்தால் - அவ்விடத்தே ஒரு
சூழ்ச்சியாலே, ஒளிக்கல் உற்றான் - அம்மகளிர் தன்னைக் காணவாறு மறைந்தான்,
(எ - று.)

     தேவியர் நெஞ்சமும், நம்பி நெஞ்சமும் காதற் பெருக்காலே நிறைந்தன வாகக்
காமனும், பக்கத்தே நின்று தன் தொழிலைச் செய்யப் பொழில் நலன் நுகர்கின்ற நம்பி,

     ஓர் உபாயத்தாலே தேவியர் தன்னைக் காணாதபடி மறைந்தான், என்க.
மறைந்தது அவர் விருப்பத்தை மிகுவித்தற் பொருட் டென்க.

(499)

 

திவிட்டன் வித்தையால் உருக்கரத்தல்

1630. பொன்னவிர் குழையி னாரைப்
     பொழில்விளை யாட லேவி
மன்னவன் மதலை மாட
     வளநக ரணுகு வான்போல்
தன்னைமெய் மறைத்தோர்
     விஞ்சை தாழிரு ளெழினி யாகப்
பின்னைமா தவனுந் தானும்
     1பிணையனா ருழைய னானான்.
 

     (பாடம்) 1 பிணையவ.