பக்கம் : 1015
 

     பறப்பை - பறவை. பாவை முதலிய வடிவினவாகப் புனைந்து பெருந்தேவியின்
சிகையிலே சூட்டுவாருமாய் என்க.

(504)

 
1635. அருமலர்த் தழையும் போது
     மடியுறை யாக வேந்திக்
திருமலர்ப் பாவை யன்ன
     தேவியைச் செவ்வி காண்பார்
உருமல ரிழைத்த பாவை
     யொளிமண நயந்து மாதோ
குருமலர்க் கொம்பி னொல்கிக்
     குரவையின் 1மயங்கு வாரும்.
 
     (இ - ள்.) அருமலர் போதும் தழையும் அடியுறையாக ஏந்தி - மலர்ந்த அரிய
மலர்களையும் தழைகளையும் அடிக்காணிக்கையாகக்கொண்டு, திருமலர்ப்பாவை அன்ன
தேவியை - அழகிய செந்தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகளை ஒத்த சுயம்பிரபையை,
செவ்வி காண்பார் - அமயமறிந்து கண்டுமகிழ்வாரும், உருமலர் இழைத்த பாவை - அழகிய
மலராலே இயற்றிய பதுமையின், ஒளி மணம் நயந்து - ஒளியையும் நறுமணத்தையும்
விரும்பியவராய், (மாதோ) குருமலர்க் கொம்பின் ஒல்கி - நிறமமைந்த பூங்கொம்புபோலத்
துவண்டு, குரவையின் மயங்கி நிற்பார் - குரவைக் கூத்தின்கட் பொருந்துவாரும், (எ - று.)

     தழையும் போதும் அடியுறையாக ஏந்தித் தேவியைச் செவ்வி காண்பாரும்
மலராலிழைத்த பாவையின் ஒளியையும் மணத்தையும் நயந்து ஒல்கிக் குரவைக்
கூத்தாடுவாருமாய் என்க.

(505)

 
1636. சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித்
தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் 2வீச
மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடுவாரும்.
 
     (இ - ள்.) சிகரமாய் இலங்கு சென்னி தென்மலைச்சாந்து மூழ்கி - கொடுமுடிகளை
உடைத்தாய்த் திகழாநின்ற தலையை உடைய பொதிய மலையிலே உண்டாகும் சந்தனக்
குழம்பிலே முழுகி, பகரும் மா மணி வண்டு ஓவா - இசைபாடுகின்ற கரிய மணி போன்ற
வண்டுகள் அகலாத, பணைமுலை பாரந்தாங்கி - பருத்த முலையாகிய சுமையைத் தாங்கிக்
கொண்டு, தகரவார் குழல் பின் தாழ - மயிர்ச்சாந்தம் நீவிய நீண்ட கூந்தல் பின்புறத்தே
தாழ்ந்துகிடப்ப, தாழ்குழை - தூங்குகின்ற தோடுகள், திருவில் வீச - அழகிய ஒளியைப்
பரப்ப, மகரயாழ் எழுவி - மகரயாழை வருடி இன்இசை எழீஇ, மன்னன் வண்புகழ் -
திவிட்டனது வளமிக்க புகழை, பாடுவாரும் - இசைப்பாட்டிலே இயைத்துப் பாடுவாரும்,
(எ - று.)
 

     (பாடம்) 1 மயங்கி நிற்பார். 2 வீசி