பக்கம் : 1018
 

     (இ - ள்.) கோதையும் - மலர்மாலையும், குழைவு இன்பட்டின் கொய்சகம் தலையும் -
குழைவுடைய இனிய பட்டினது கொய்சகத்தலைப்பும் தாழ - தூங்காநிற்ப, மாதர்வண்டு -
அழகிய வண்டுகள், ஒருங்குபேர - ஒருங்கே அகல, மழையிடை நுடங்கும் மின்போல் -
முகிலிடத்தே தவழ்கின்ற மின்னற்கொடி போன்று, போது அலர் பொதும்பில் - மலர்கள்
விரிந்த பொழிலினூடே, தாழ்ந்த - தூங்காநின்ற, பொன்எழில் நூழில் ஊசல் தன்மேல் -
பேரழகுடைய நூழிற்கொடியாலாய ஊசலின்கண் அமர்ந்து, ஓத நீர் வண்ணற் பாடி - கடல்
வண்ணனாகிய திவிட்டன் புகழைப் பாடி, ஊழ் - முறையாக, இயங்குவாரும் -
ஆடுகின்றவரும், (எ - று.)

     நூழிற் பொன்னூசல் என இயைக்க. நூழில் - நூழிற்கொடி.

     கோதையும், கொய்சகத் தலையும் தாழ, வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கு
மின்போல், பொழிலிடத்தே ஊசலேறி, நம்பியின் புகழ்பாடி, முறையாக ஆடுவாரும் என்க.
இச் செய்யுள் ஊசலாடும் மகளிரைக் கற்போருளத்தே நன்கு ஓவியம் போலே காட்டும்
அருமையை நோக்குக.

(509)

 

வாழைக் குருத்தில் உகிரால் ஓவியங் கிள்ளல்

1640. கள்ளுமிழ்த் துயிர்க்குஞ் சோலைக்
     1கனமடற் குமரி வாழை
உள்ளெழு சுருளை வாங்கி
     யொளியுகிர் நுதியி னூன்றிப்
புள்ளெழு தடமும் போர்மான்
     றொழுதியு மிதுன மாய
ஓள்ளெழி 2லுருவுங் கிள்ளி
     யுழையவர்க் கருளு வாரும்.
 
     (இ - ள்.) கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை - தேன் துளித்து நறுமணங்கமழும்
அப்பொழிலிடத்தே, கனமடல் குமரி வாழை - கனவிய மடல்வாய்ந்த ஈனாத வாழையின்,
உள் எழு சுருளை வாங்கி - உள்ளே புதுவதாய் எழாநின்ற சுருளாகிய குருத்திலையை
அரிந்தெடுத்து, ஒளிஉகிர் நுதியின் ஊன்றி - ஒளியுடைய தம் நகத்தின் நுனியாலே
அழுத்தி, புள் எழுதடமும் - பறவைகள் எழாநின்ற குளங்களைப்போன்றும், போர்மான்
தொழுதியும் - தம்முட் போரிடுகின்ற சிங்கக் குழாம்போன்றும், மிதுனம் ஆய -
இணையாகிய, ஒள்ளெழில் உருவும் - ஒளியுடைய அழகிய பறவை யுருவங்கள் போன்றும்,
கிள்ளி - உருவமையக் கிள்ளி, உழையவர்க்கு - தம் தோழிமார்க்கு, அருளுவாரும் -
வழங்குவாரும், (எ - று.)

     தேவியர் கனவிய வாழை மடலகத்தை உள்ள வாழைக்குருத்தினை வாங்கி விரித்து
அதன்கண் தம் நகத்தாலே ஊன்றி தடமும் மான்றொழுதியும் மிதுனமும் போன்று
உருவங்கிள்ளித் தம் தோழியர்க்குக் கொடுப்பாரும் என்க.

     போர் மான்தொழுதி - போரிடுகின்ற மான் கூட்டமுமாம். மிதுனம் - காதலிணைப்
பறவை முதலியன.

 (510)

 

     (பாடம்) 1 கடைமடற். 2 லுருவம்.