பக்கம் : 1024
 

     போகம் - கட்பொறிக்கு நுகர்புலன் ஆதல்.

     மாகம் - உடலுமாம். காதன் மடந்தையர் மயில்சோலையிலே பரவிச் செல்வனபோல்
மணிமேகலை புலம்பப் புக்கார் என்க.

(518)
 
1649.
 
அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல
வரையிலங்கு மேகலை மாறேநின் றார்க்கும்
புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தில்
நிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும்.
 
     (இ - ள்.) அரையிலங்கும் மேகலை ஆர்ப்பின் - இடையிலே யாத்த மணிமேகலை
ஒலிக்குமாயின், அயல இலங்குவரை - பக்கலிலே திகழ்வன வாகிய மலைகள், மேகலை
மாறே நின்று ஆர்க்கும் - அம் மணிமேகலை ஒலிக்கு எதிர் ஒலிசெய்து நின்று ஒலிக்கும்,
புரை இலங்கு பொன் சிலம்புதான் சிலம்பும் போழ்தில் - உட்டுளையுடன் விளங்குகின்ற
பொன்னாலாய மகளிர் காலணியாகிய சிலம்புகள் முழங்கும்பொழுது, நிரை இலங்கு பொன்
சிலம்பு - நிரலாகத் திகழாநின்ற பொன்னாலாய செய் குன்றங்கள், நேரே -அம்முழக்கிற்கு
எதிராக, சிலம்பும் - முழங்கும், (எ - று.)

     புரை - உயர்வுமாம். மேகலை முழங்குங்கால் அவ்வரை எதிர் ஒலிசெய்யும் சிலம்பு
ஒலிக்குங்கால் அச் செய்குன்றம் எதிரொலி செய்யும் என்க.

(519)

 
1650. கொங்குண் குழலார் குழலேர் மணிமழலை
தங்கி னவைகொண்டு தானு மெதிர்மிழற்றும்
அங்க ணவர்செய்வ செய்தசதி யாடின்றே
செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே.
 

     (இ - ள்.) செங்கண் நெடியான் - சிவந்த கண்களையுடைய நெடுமாலாகிய திவிட்ட
நம்பியின், கடிகாவில் - மணமிக்க பூம்பொழிலின் கண் உள்ள, செய்குன்றே - செய்குன்று,
கொங்கு உண் குழலார் - நறுமணம் ஊட்டப்பெற்ற அளகத்தையுடைய மகளிர்கள், குழல்ஏர்
மணிமழலை - வேய்ங்குழலிசைபோன்ற அழகிய முத்துமுத்தாய் மிழற்றுகின்ற மழலை
மொழிகள், தங்கின் - தோன்றுமிடத்தே,

     அவைகொண்டு - அம்மொழியைத் தான் ஏற்றுக்கொண்டு, தானும் எதிர் மிழற்றும் -
தானும் அம்மழலை மொழிகளை எதிரொலியாக மிழற்றா நிற்கும், ஆதலின், அங் கணவர்
செய்வ செய்து - அழகிய கண்களையுடைய அம்மகளிர் செய்யும் செயல்களைத் தானும்
செய்வதாய், அசதியாடின்று - அசதியாடிற்று.