பக்கம் : 1025
 

     அசதியாடுதல் - பரிகசித்தல்.

     அச் செய்குன்றம் அம்மகளிர் மழலையைத் தானும் மிழற்றி அவரை அசதியாடிற்று
என்க.

(520)

 
 
1651. மருவி மழைதவழு மையோங்க சாரல்
அருவி கொழித்த வருமணிகள் வாரித்
தெருவு படத்திருத்திச் சீலம் புனைவார்
உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார்.
 
     (இ - ள்.) மழை மருவி தவழும் மை ஓங்கு சாரல் அருவி கொழித்த அருமணிகள்
வாரி - முகில்கள் வந்து தவழ்கின்ற இருள்மிக்க தாழ்வரையிடத்தே ஒழுகும் அருவிகள்
ஒதுக்கிய பெறற்கரும் மணிகளை அள்ளி, ஒண்நுதலார் - ஒள்ளிய நெற்றியையுடைய
அம்மகளிர்கள், தெருவுபடத்திருத்தி - தெருக்களைப்போலச் சீர்திருத்தி, சீலம் புனைவார் -
ஒழுங்குபடுத்துவாராய், உருவ நகர் - அழகிய விளையாட்டு வீடுகளை, இழைப்பார் ஆனார்
- இயற்றுவாராய் விளையாட்டயர்வாராயினர், (எ - று.)

     ஒண்ணுதலார் அருவி கொழித்த மணிகளை வாரி வீடியற்றி விளையாட்டயர்ந்தார்
என்க.

(521)

 
 
1652. மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென்
றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத்
திரைதவழச் சீறடிக ணோவ நடந்து
விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார்.
 
     (இ - ள்.) மரகத ஈர்ங்கதிரை - மரகதமணியிடத்தே தோன்றாநின்ற ஈர்ந்தாற்போன்ற
சுடரை, வார்புல் தளிர் என்று - நீண்ட பசும்புல்லின் இளந்தளிர் என்று, உரைதரு -
கருதிக்கூறாநின்ற, காரிகையார் - அழகை யுடைய அம்மகளிர்கள், ஊன்றி மிதித்து - தம்
மடிகளை அக்கதிரிடத்தே ஊன்றி மிதித்தமையால், சீறடிகள் நோவ - அம்மரகதமணியாலே
உறுத்தப் பட்டுத் தம் சிறிய அடிகள் வருந்த, திரை தவழ நடந்து - அச்சுடர் திரைந்து தம்
அடியிலே தவழுமாறு மெல்ல நடந்து போய், விரைதரு பூம்படைமேல் - மணங்கமழும்
விடுபூவாலாய படுக்கையின் மேலே, மெல்ல - இனிதாக, அசைந்தார் - வதிவாராயினர்,
(எ - று.)