பக்கம் : 1027
 

     தெண் நீர்த்துளி சிதற - தான் அவ்வொளிக்கெதிரே தெளிந்த நீர்த்துளியைச்
சிதறிற்றாக, மங்குல் மழை அயிர்த்து - அம்மகிளிர்கள் அந்நீர்த்துளிகளை முகில்கள்
துளிக்கும் மழைத்துளி போலும் என்று ஐயுற்று, வார்பொழிலின் வாய் அயலுள்ள நீண்ட
பொழிலினூடே புகுந்து, மறைவார் - அம்மழைக்கு மறைந்து கொள்வார், (எ - று.)

     தேவியரின் திருமுகவொளியைத் திங்கள் ஒளியாகக் கருதிச் சந்திர காந்தம்,
நீர்த்துளியை உதிர்த்ததாக, அத்துளிகளை மழைத்துளிகளாகக் கருதித் தேவியர்
பொழிலிடத்தே சென்று மறையலாயினர் என்க.

(524)

 

இதுவுமது

1655. வம்பத் திருளுருவின் மாணிக்கச் செங்கதிரை
அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று
தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து
கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார்.
 
     (இ - ள்.) வம்பத்திரள் உருவின் - புதுமைமிக்க திரண்ட உருவினை யுடைய,
மாணிக்கச் செங்கதிரை - மாணிக்க மணியின் சிவந்த சுடரை, அம்பொன் சிலம்பின்
அசோகந்தளிர் என்று - அழகிய அப்பொன் மலைக்கணணேயுள்ள அசோகமரத்தின் தளிர்
என்று கருதி, தம் பொன்சுடர் ஆழிமெல்விரலால் - தம்முடைய பொன்னாலாய ஒளியுடைய
ஆழியணிந்த மெல்லிய விரல்களாலே, தைவந்து - தடவிப்பார்த்து, கொம்பிற்குழைந்து -
நாணமுற்றுப் பூங்கொம்புபோல ஒல்கி, குறுமுறுவல்கொண்டு - புன்முறுவல் பூத்து,
அகல்வார் - அயலிலே செல்லா நிற்பர், (எ - று.)

     சிலமகளிர் புதுமைமிக்க திரண்ட உருவினையுடைய மாணிக்க மணியின் செவ்விய
கதிரை, அசோகந்தளிர் என்று கருதித் தம் விரலாலே தடவிப் பார்த்து, அல்லாமை கண்டு
நாணிக் குறுமுறுவல் கொண்டு புறத்தே போயினர் என்க.
 

 (525)

 

இதுவுமது

1656. விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார்.