பக்கம் : 1030
 

மகளிர் பாட்டு

1660. கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான்
ஆடியல் யானை யயக்கிரீவ 1னைமடித்தான்
வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான்
வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.
 
     இதுமுதல் 3 செய்யுள்கள் ஒரு பொருள் மேல் அடுக்கிவந்தன.

     (இ - ள்.) கோடி சிலை எடுத்தான் - கோடிக்குன்றத்தை அகழ்ந்து ஏந்தினான், கோள்
அரிமா வாய்போழ்ந்தான் - கொலைத்தொழிலையுடைய சிங்கத்தின் வாயைப் பிளந்து
கொன்றான், ஆடியல்யானை அயக்கிரீவனை மடித்தான் - அசையும் இயல்பிற்றாய யானை
போல்வனாகிய அச்சுவ கண்டனைக் கொன்றான், வீடுஇல் மணியருவி வெண்மலையும்
கைப்பிடித்தான் - இடையறவுபடாத அழகிய அருவியை உடைய வெள்ளி மலையையும்
கைக்கொண்டான், (அவன் யாரெனில்) வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே -
வாடுதலில்லாத கற்பகப் பூமாலையை முடிக்கண் அணிந்த கரிய முகில்போலும்
வண்ணமுடைய நம் தலைவனாகிய திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.)

     கோடிக்குன்றம் ஏந்தினான் கோளரி வாய் பிளந்தான்; அயக்கிரீவனைக் கொன்றான்;
வெண்மலையும் கைப்பிடித்தான்; அவன் யாரெனில் மாமேக வண்ணன் என்றார் என்க.

(530)

 
1661. வலம்ரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான் *
சலம்புரி சண்டை தலைபனிப்புக் கண்டான்
பொலம்புரி 2தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
கலம்புரி வண்டடக்கைக் கார்மேக வண்ணனே.
 
     (இ - ள்.) வலம்புரி வாய் வைத்தான் - வலம்புரியாகிய பாஞ்ச சந்நியத்தைத்
திருவாய்மலரிலே வைத்து முழக்கினான், வார்சிலை கைக்கொண்டான் - நெடிய
சார்ங்கமென்னும் வில்லைக் கையிலே பற்றினான், அவ்வளவானே, சலம்புரி சண்டை -
பகைவருடைய வஞ்சகமிக்க போர்த் தொழிலிலே, தலை பனிப்புக் கண்டான் - அவர் தம்
தலைகள் அச்சத்தாலே நடுங்கியதனைப் பார்த்தான்,

     பொலம்புரி தாமரையான் - பொற்றாமரை மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகளின்,
பொன் ஆகம் தோய்ந்தான் - அழகியதிருமேனியைத் தழீஇயினான், (அவன் யார் எனில்)
கலம்புரி வள்தடக்கை - அருங்கலங்களையுடைய வள்ளன்மைமிக்க பெரிய
கையினையுடைய, கார்மேக வண்ணனே - கரிய முகில் நிறமுடையோனாகிய நம் தலைவன்
திவிட்ட நம்பியே ஆவன், (எ - று.)
 

     (பாடம்) 1 னையடித்தான், னேயிடித்தான். 2 தாமரையான்.
     * இப்பாடல் சில பிரதிகளில் இல்லை.