பக்கம் : 1035
 
  வெங்கதிர் விரிந்த வெய்யோன்
     விசும்பிடை 1வெதும்பி வேவச்
செங்கதிர்க் கூடங் குத்திச்
     2செந்நடு வாக நின்றான்.
 
     (இ - ள்.) மங்கையர் தம்மையெல்லாம் - தன் தேவியராய அம்மகளிரையெல்லாம்,
மணிவண்ணன் - திவிட்டன், மருட்டி - இவ்வாறு அச்சுறுத்தி, மற்றுஇக் கொங்கு அவிழ்
குளிர்கொள் சோலை - இந்த மணங்கமழும் குளிர்ந்த சோலைசூழ்ந்த, குன்றினின்று
இழிந்தபோது - செய்குன்றிலிருந்து இயங்கியபொழுது, வெங்கதிர் விரிந்த வெய்யோன் -
வெவ்விய கதிரை விரித்த கதிரவன், விசும்பு இடைவெதும்பி வேவ - விண் தன்
இடமெல்லாம் வெப்பமுற்று வேகும்படி, செங்கதிர்க்கூடம் குத்தி - தனது செவ்விய கதிராலே
கூடாரம் அடித்து, செந்நடுவாக நின்றான் - அவ்விசும்பின் செவ்விதாய உச்சியிலே
நிற்பானாயினன், (எ - று)

     செந்நடு - சரியான நடுவிடம்.

     நம்பி யானையாலே தேவியரை மருட்டிக் குன்றினின் றிழிந்தபோது ஞாயிறு
உச்சியிலே நின்றான் என்க. கூடம் - சம்மட்டி.

(538)

 
நீர் விளையாட்டு
1669. அணங்கனார் நுதலின் மேலி
     லரும்பிய வாரத் தெண்ணீர்
மணங்கம ழலங்கன் மார்பன்
     மனத்தினை வாங்க மற்றக்
கணங்குழை மடந்தை மாரைக்
     கடிபுன லாடல் காண்பான்
3வணங்கொள்பூந் துணர்நீள் சோலை
     மண்டுநீர் வாவி 4சார்ந்தான்.
 
     இதுமுதல், 17 செய்யுள்கள் நீர்விளையாட்டின் மேலவாய ஒரு தொடர்.

     (இ - ள்.) அணங்கு அனார் - தெய்வமகளிரை ஒத்த அம்மடந்தை யரின், நுதலின்
மேலில் - நெற்றிமிசை, அரும்பிய - முகிழ்த்த, ஆரத்தெண்ணீர் - முத்துப்போன்ற தெளிந்த
வியர்வைத்துளிகள், மணங்கமழ் அலங்கல் மார்பன் - மணங்கமழ்கின்ற மாலையணிந்த
மார்பையுடைய திவிட்டநம்பியின், மனத்தினை வாங்க - உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து
கொள்ள,

     கணங்குழை மடந்தைமாரை - வட்ட வடிவினவாகிய தோடுகளை யுடைய தன்
தேவிமாரை, கடிபுனல் ஆடல் காண்பான் - மணமிக்க நீர் விளையாட்டு ஆடுதலைக் காண
விரும்பி, வணம்கொள் பூந்துணர் நீள்சோலை - நல்ல நிறமமைந்த பூங்கொத்துக்கள் நீளா
நின்ற அப்பூம் பொழிலிடத்தே, மண்டுநீர் வாவி - இயங்குகின்ற நீர்மிக்க பொய்கையினை,
சார்ந்தான் - அம்மகளிரோடு சென்றெய்தினான் (எ - று.)   
 
 

     (பாடம்) 1வெதும்ப வெம்பி. 2 சென்னடு.

     3 மணங்கொள் பூந்துணர்கொள் சோலை. 4சார்ந்தார்.