பக்கம் : 1037
 

     (இ - ள்.) அன்னவாறு அமைந்த தெண்நீர் - அங்ஙனம் பலவேறு வகையான்
அமைந்துள்ள தெளிந்த நீர்மையை உடைய, அலைபுனல் - அலையையுடைய நீரிலே,
ஆடும்போதில் - ஆடும்போதில்-விளையாடும் போது, மன அவாம் வயிரத்தோளான் -
அரசர்கள் விரும்புதற்குக் காரணமான மறத்தன்மை மிக்க தோளையுடைய திவிட்டநம்பி,
உழையரை - பணியாட்களை, இன்னவாறு இயற்றுகென்று - இவ்வாறு செய்யுங்கோள் என்று
பணித்து, மறைய ஏவி - அம் மகளிர் அறியாதபடி ஏவியபின்னர், பொன் சுணங்கு
போர்த்தபுணர் அவாம்முலை மகளிரோடு - பொன்னிறத் தேமல் படர்ந்த புணர்தலை
அவாவுதற்குக் காரணமான முலைகளையுடைய தன் தேவியரோடே, வலம்சுழி வாவிபுக்கான்
- வலப்பக்கம் சுழித்தோடுகின்றதொரு வாவியிலே புகுந்தனன், (எ - று.)

     நம்பி அத்தகைய வாவியிலே தேவியரோடே ஆடும்போது, உழையர்க்கு, இன்னவாறு
செய்மின் என மறைவிற் கூறி, உய்த்துப் பின்னர்த் தேவியரோடே வலஞ்சுழித்தோடும் ஒரு
வாவியிலே புக்கான் என்க.
 

(541)

 
 
1672. மலங்குபாய் தயங்கு பொய்கை
     மணிக்கல்வா யடுத்த செம்பொற்
கலிங்கினா றிழிந்து கீழே
     கலந்தவந் தெழுந்த தெண்ணீர்
அலங்கலான் மடந்தை 1மார்கட்
     கரும்புணை யாக வீங்கி
வலங்குலாய்ச் சுழிந்து வாய்த்த
     வாவிவாய் மடுத்த தன்றே.
 
     (இ - ள்.) மலங்குபாய் - மலங்குமீன்கள் பாய்கின்ற, தயங்கு பொய்கை -
விளங்குகின்ற அவ்வாவியின்கண், மணிக் கல்வாய் அடுத்த செம்பொன் கலிங்கின் ஆறு -
மணிகளாகிய கற்கள் பொருந்திய வாயை உடைய செவ்விய பொன்னாலியன்ற மதகு
வழியாக, இழிந்து - ஒழுகி, கீழே கலந்து - அவ்வாவியின் அடிநிலத்தே பரவி, வந்து
எழுந்த தெண்ணீர் - வந்து பெருகிய தெளிந்த நீர், அலங்கலான் - திவிட்டநம்பி,
மடந்தைமார்கட்கு - தன் தேவிமார்களுக்கு, அரும்புணையாக - உற்றுழி உதவும் அரிய
தெப்பமாகும்படி, வீங்கி - பெருகி, வலம் குலாய்ச் சுழிந்து - வலப்பக்கமாக வளைந்து
சுழியிட்டு, வாய்த்த வாவிவாய் மடுத்தது அன்றே - பொருந்திய அவ்வாவியிடத்தே
நிரம்பிற்று, (எ - று.)
 
 

     (பாடம்) 1 தகு, மடந்தை மார்தனரும்புணை கடாங்கி. சூ.-66