பக்கம் : 1038
 

     அவ் வாவியின்கண் மதகு வழியாக விட்ட தெண்ணீர், பெருகித் தேவியர்க்கு நம்பி
தெப்பமாம்படி வீங்கி வலஞ்சுழித்து வந்து மடுத்ததென்க.

     நிர் பெருகப் பெருகத் தேவியர் நம்பியைப் பற்றி ஏறுதலில் நம்பி தெப்பமாயினன்
என்க.

(542)

 
 
1673. அலைபுனல் பெருக லோடு
     மலைகடல் வண்ணன் றன்னை
மலைபுனை கொடியிற் புல்லி
     மடந்தையர் மயங்கு வாரும்
மிலைபுனை கோதை சோர
     விடுபுணை தழுவு வாரும்
கலைபுனை துகிலுந் தோடு
     மொழியப்போய்க் 1கரைசேர் வாரும்.
 
     (இ - ள்.) அலைபுனல் பெருகலோடும் - அவ்வாறு அலையையுடைய அந்நீர்
பெருகியவுடன், அலைகடல் வண்ணன்றன்னை - அலையையுடைய கடல்போன்ற
வண்ணமுடைய திவிட்டநம்பியை, மலைபுனை கொடியிற் புல்கி - மலையிடத்தே பற்றிய
கொடிகளைப் போன்று தழீஇக்கொண்டு, மடந்தையர் மயங்குவாரும் - தேவிமார்கள் மனம்
மயக்கங்கொள்வாரும், மிலைபுனை கோதை சோர - தாம் சூடியிருந்த மலர்மாலைகள்
நழுவி நீரிலே மிதப்ப, விடுபுணை தழுவுவாரும் - அவற்றை நீர்கடக்கும் தெப்பமாகத்
தழீஇக்கொள் வாரும், கலைபுனை துகிலும் தோடும் - மேகலையும் உடுத்திய ஆடையும்
தோடுகளும், ஒழிய - நீரிலே போய்விட, போய்க்கரைசேர்வாரும் - இவற்றை யின்றித் தாம்
கரையிலே ஏறுவாரும், (எ - று.)

     புனல் மிக்குப் பெருகியவுடன் தேவியர் நம்பியைப் புல்லுவாரும் மயங்கு வாரும்
மலர்ப்புணை தழுவுவாரும் கரை சேர்வாரும் ஆயினர் என்க.

(543)

 
 
1674. ஆர்புனல் சுழித்து வாங்க
     வனையரா யணிபொன் வாவி
நீர்புனை தடத்தி னுள்ளா
     னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத்
தார்புனை மார்பன் றன்மேற்
     றரங்க 2நீ ரொருங்கு தூவி
வார்புனை முலையி னல்லார்
     மயங்கமர் 3தொடங்க லுற்றார்.
 
     (இ - ள்.) ஆர்புனல் சுழித்து வாங்க - பொருந்திய நீர் சுழியிட்டுத் தம்மை ஈர்ப்ப,
அனையராய் - அம்மகளிர் அவ்வண்ணமாகி, அணிபொன் வாவி - அழகிய
பொன்கரைகளையுடைய அவ்வாவியிடத்தே, நீர்புனை தடத்தின் உள்ளால் - நீர்
பொருந்திய ஓர் இடத்தே, நிலைகொண்டு - நிலைத்து நின்று, நெடுங்கண் சேப்ப - தம்
நீண்ட கண்கள் சிவக்க, தார்புனை மார்பன் தன்மேல் - மலர்மாலையணிந்த மார்பையுடைய
திவிட்டநம்பியின் மேல்,

     தரங்கநீர் ஒருங்கு தூவி - அலையுடைய நீரை ஒருங்கே தூவுவாராய், வார்புனை
முலையின் நல்லார் - கச்சணிந்த முலையினை யுடைய அம்மடந்தையர், மயங்கு அமர்
தொடங்கினார் - மயங்குதற்குக் காரணமான போரைத் தொடங்கினர், (எ - று.)
 
 

     (பாடம்) 1 கரைகொள். 2 நீர் தயங்கத். 3 தொடங்கினாரே.