பக்கம் : 1039
 

     நீர் சுழித்து வாங்குதலாலே அவ்வாறாய மகளிர் அவ்வாவியிலே ஒரு மேட்டிடத்தே
நிலைகொண்டு கண்சிவக்க நீரைத் தூவி அமர் தொடங்க லுற்றார் என்க.

     நீராடலாற் சிவந்த கண்ணுடையர் தேவியர் ஆதலின், அமர் தொடங்கலுற்றார்
என்றதற்கேற்பக் கண்சேப்ப என்றார்.

(544)

 
1675. திரளிருஞ் சிவிறி வீக்கிச்
     செழுமழைத் தாரை பெய்வார்
மருளிரும் பிணையன் மாலைப்
     படைபல வழங்கிச் சூழ்வார்
சுருளிருந் தோடு வாங்கித்
     தோண்மிசை 1துளங்க வீழ்ப்பார்
இருளிருங் குழலி னார்க
     ளிறைவன்மே லினைய ரானார்.
 
     (இ - ள்.) திரள் இரும் சிவிறி வீக்கிச் செழுமழைத்தாரை பெய்வார் - திரண்ட பெரிய
நீர்த்துருத்தியாலே விசைத்துச் செழிப்புடைய மழைத்தாரை போன்று நீரைத் திவிட்டன்
மேலே வீசுவாரும், மருள் இரும் பிணையல் மாலைப்படை பல வழங்கிச் சூழ்வார் -
வியத்தற்குரிய பெரிய பிணையலாகிய மலர் மாலையென்னும் போர்க்கருவி பற்பல நம்பி
மேலே வீசிச்சூழ்ந்து கொள்வாரும், சுருள் இருந்தோடு வாங்கி - பொற்சுருள்களையும்
பெரிய தோடுகளையும் களைந்து, தோண்மிசை - நம்பியின் தோள்களின் மேலே, துளங்க
வீழ்ப்பார் - திகழும்படி பெய்வாரும், இருள் இருங்குழலினார் கள் - இருண்ட பெரிய
கூந்தலையுடைய மகளிர்கள், இறைவன்மேல் - நம்பியின் மேலே, இனையர் ஆனார் -
போர்த்தொழிலிலே இத்தகையோர் ஆயினார், (எ - று.)

     தேவியர் நம்பியின்மேல் தாரை பெய்வாரும், பிணையல் மாலைப் பெரும்படை
வழங்கிச் சூழ்வாரும், சுருளும் தோடும் வாங்கித் துளங்க வீழ்ப்பாரும் ஆனார், என்க.

(545)

 
1676. சாந்தெழு சிவிறித் தாரை
     சதுர்முக மாக வீக்கிப்
பாய்ந்தன பவழச் செங்கே
     2ழங்கையாற் படுத்த தெண்ணீர்
வேய்ந்தன திவலை யாகி
     விழுந்தன வேரி மாலை
நாந்தகக் கிழவன் பொய்யே
     நங்கைமார்க் குடைந்து நின்றான்.
 
 

     (பாடம்) 1 துளங்கி. 2அங்கையான் முகந்த.