பக்கம் : 104
 

     யானைகளிடத்தினின்று விரைவாகச் சொரிகின்ற மூன்று வகை மதநீர்களின் பெருக்குக்
கலக்கப்பெற்ற அவ் அருவிநீர்கள்; போக மல்லிகை நாறும் - அவ்வியானை மதமணத்தோடு
போகநிலமாகிய நாகருலகத்து மல்லிகை மலர்களின் மணமும் கமழா நிற்கும். (எ - று.)

     மும்மத வேழங்கள் படிந்தமையின் மதநாற்றம் வீசிநின்ற அருவி நீர், நாகலோகத்து
இளமகளிர் நீராடப்பெற்றமையின் அவர்கள் சூடியிருந்த நாகருலகத்து மல்லிகை மலர்களின்
மணமும் வீசலாயிற்று என்க. யானை மதமும் மணக்கும் என்பதனை, “மத்தநல் யானை
மதமும் நானமும், வாசப் பொடியொடுகா யத்துக்கமழ“ எனவரும் பெருங் கதையானும்
உணர்க. நாகலோகம் - பாம்புச் சாதியார் வாழும் கீழுலகம். இது சைன நூல்களில்
பவணலோகம் எனப்பெறும். நாகருலகினும் இன்பநலம் சிறந்தது இது வென்பார் இவ்வாறு
அவ்வுலகத்து மகளிரும் வந்து நீராடுதலைக் கூறினார். ஞால் - நால் என்பதன் முதற்போலி.
 

( 10 )

சேடிநாட்டின் சிறப்பு

129. 1பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யாமுரைக் கின்றதிங் கென்கொலோ.
 
     (இ - ள்.) வீக்குவார்கழல் விஞ்சையர் சேடி - இறுக்கப்பட்ட நீண்ட வீரக்கழலை
யணிந்த வித்தியாதரர்களது உலகில்; பூக்கள் ஆவன பொன்மரை - மலர்களாக
விளங்குவன பொற்றாமரை மலர்களாம்; பொழில் பூ காக்கள் ஆவன - பெருமை
பொருந்திய பூஞ்சோலைகளாவன; கற்பகச் சோலைகள் - கற்பக மரங்களின் கூட்டங்களாம்;
மேல் - இதற்குமேல்; ஊக்கியாம் இங்கு உரைக்கின்றது - உள்ளங்கிளர்ந்து நாம்
இவ்விடத்திலே எடுத்துக் கூறுகின்றது; என்கொலஓ - மற்றும் யாதோ? (எ - று.)

     பொன்மயமான தாமரை மலர்களும் கற்பகச் சோலைகளும் நிறைந்த அவ்வித்தியாதரர்
உலகைப்பற்றி இதற்கு மேலும் கூறல் வேண்டுமோ என்பதாம். மரை முதற்குறை விகாரம்.
பொழில் - பெருமை. இதனை, “புவியும் சோலையும் பெருமையும் பொழிலே“ “பாடுமாண்
பாழிமீளி பணைபொழில் பகடுமூரி“ என்பவைகளால் உணர்க.

 


     (பாடம்) 1. பூக்களாவபொன்.