பக்கம் : 1041
 

     (இ - ள்.) வென்றனம் வீரன்றன்னை - வீரனாகிய நம்பியை யாம் வென்றுவிட்டேம்,
வீக்குமின் சிவிறித்தாரை சென்று என - விடாதே துருத்தி நீர்த்தாரையை வீசுங்கோள்
அணுகி நின்று என்று, சிறந்த காதல் தேவியர் - சிறந்த தலையன்புடைய தேவிமார்கள்,
திளைக்கும் போழ்தில் - திவிட்ட நம்பியை நெருக்கிய அமயத்தே, ஒன்றிய உழையர் -
நம்பியின் ஏவலிலே பொருந்திய பணியாளர், கீழ்நீர் ஓ பறித்திடுதலோடும் - அவ்வாவியின்
கீழே உள்ள நீரை மதகின் பலகையை அகற்றி ஓடிவிடும்படி செய்தனராக அங்ஙனம்
செய்தவுடனே, நின்று அகம் சுழிந்த தெண்ணீர் - அவ்வாவியில் நிலைத்து நின்று உள்ளே
சுழித்திட்ட தெளிந்த நீர், நெரேல் என - பொள்ளென, இழிந்தது - வடிந்தொழிந்தது,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     ஓ - ஓரெழுத் தொருமொழி - மதகிலிட்டு நீரைத் தேக்குதற்குரிய பலகையின் பெயர்.
பறித்தல் - உருவி எடுத்தல் - நீரைத்தேக்கும் போது செருகியும் வடியச் செய்யும்பொழுது
உருவியும் விடுதல் வழக்கம். ஆகலின், ஓப்பறித்திடுதலோடும் என்றார். நெரேல், என்பது
ஈண்டு விரைவு குறித்து வந்தவொரு குறிப்புச் சொல்.

       (548)    

 
 
1679. மாலையுந் துகிலும் வாரி
     வார்புன லொழுகும் போழ்தின்
ஆலையின் கரும்பி னின்சொ
     லணங்கனா ரவிழத் தத்தம்
கோலமென் றுகில்க டாங்கிக்
     குழைமுகஞ் சுடரக் கோட்டி
வேலைநீர் வண்ணன் முன்னர்
     நாணினான் மெலிவு சென்றார்.
 
     (இ - ள்.) மாலையும் துகிலும் வாரி - மகளிருடைய மாலைகளையும் ஆடைகளையும்
கவர்ந்துகொண்டு, வார்புனல் - அந்நெடிய நீர், ஒழுகும் போழ்தின் - ஓடியபோது, ஆலை
இன் கரும்பின் இன்சொல் அணங்கனார் - பொறியிடத்தே ஆட்டப்பெற்ற இனிய
கருப்பஞ்சாறு போன்ற இனிமையுடைய சொற்களைப் பேசுகின்ற தெய்வமகளிரை ஒத்த
அத்தேவிமார், அவிழ - அவிழ்ந்து நெகிழாநின்ற, தத்தம் - தங்கள் தங்களுடைய, கோலம்
மென்துகில்கள் - அழகிய மென்மைமிக்க ஆடைகளை, தாங்கி - கைகளாலே தாங்குபவராய்,
குழைமுகம் சுடரக் கோட்டி - தோடுகள் முகத்திலே ஒளிரும்படி குனிந்து, வேலைநீர்
வண்ணன் முன்னர் - திவிட்ட நம்பியின் முன்னிலைக்கண்ணே, நாணினால் - மிக்க
நாணத்தாலே, மெலிவு சென்றார் - மெலியலாயினர், (எ - று.)

     வைணவர் இறையாகிய கண்ணன் செய்த செயல்கள் அனைத்தும்
இத்திவிட்டநம்பியின்பாற் காணப்படுதலின், அக்கண்ணன் வரலாற்றில், கோவியரின் துகிலைக்
கண்ணன் கவர்ந்த வரலாற்றை, இந் நிகழ்ச்சி திவிட்டன்பாற் காட்டுதல் காண்க.

(549)