பக்கம் : 1042
 
 
1680. அருமணிக் கலாப வல்கு
     1லவிழ்துகி லசைத்து மீட்டும்
திருமணி வண்ண னோடுந்
     தேவியர் 2திளைத்துத் தெண்ணீர்ப்
புரிமணிப் பொன்செய் வாவிப்
     புணைபுறந் தழுவிப் புக்கார்
கருமணி வண்டுந் தேனுங்
     கையுறக் கலந்த தன்றே.
 
     (இ - ள்.) அருமணிக் கலாபம் அல்குல் அவிழ்துகில் அசைத்து - அரிய பதினாறு
கோவைமணிகளாலே ஆய காஞ்சியை அணிந்த அல்குற்றடத்தினின்றும் அவிழ்ந்து
நெகிழ்ந்த தத்தம் ஆடைகளை நன்கு உடுத்துக்கொண்டு, தேவியர் - அம்மகளிர்கள்,
மீட்டும் - மறுபடியும், திருமணி வண்ணனோடும் - நீலமணி வண்ணனாகிய
திவிட்டநம்பியோடே, திளைத்து - ஆடி,  தெண்ணீர் புரி மணிப்பொன் செய்புணை
புறந்தழுவி வாவி புக்கார் - தெளிந்த நீர்மையுடைய விரும்புதற்குரிய மணிகளாலும்
பொன்னாலும் அழகுறுத்திய  தெப்பங்களைத்  தழுவிக்கொண்டு வாவியிலே புகுந்தனர்,
கருமணி வண்டும்  தேனும், கையுறக் கலந்த தன்றே - கரிய  மணி  நிறமுடைய 
வண்டுகளும் தேனும்  பொருந்திக்  கலந்தன, (எ - று.)

     தேவியர் நம்பியோடு கலத்தலும், ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் தம்முட்
கலந்தன, என்க.

 (550)

 
வேறு
1681. கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர்
அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ்
செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு
மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே.
 
     (இ - ள்.) கொங்கைகள் துளும்ப நீர் குடைந்தும் - முலைகள் அசையும்படி நீரிலே
ஆடியும், கொய்தளிர் அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும் - கொய்தற்குரிய தளிர்
போன்ற அழகிய கைகளாலே வலிய புணைகளைத் தழுவி நீந்தியும், செங்கயல் கண்மலர்
சிவப்ப மூழ்கியும் - செவ்விய கயல் மீன்போன்ற கண்ணாகிய மலர்கள் சிவக்கும்படி
நீரினில் மூழ்கியும், மங்கையர் புனல் தொழில் - தேவியருடைய நீர்விளையாடல், மயங்கிற்று
என்பவே - இவ்வாறு பொருந்தாநின்றது என்று கூறுவர், (எ - று.)

     குடைந்தும் ஆடியும் சிவப்ப மூழ்கியும் தேவியரின் புனல் விளையாடல் இவ்வாறு
நிகழலாயிற்றென்க.

(551)

 

     (பாடம்) 1 வீழ்துகிலசைத்து. 2 திளைத்த.