பக்கம் : 1046
 

     பகற்கோயில் - பகற்பொழுதிலே பயிலுதற்குரிய, மாளிகை. நம்பி தேவியரோடே
புனல் விளையாட்டயரும் பொழுது பணிமகளிர் வந்து தொழுது நாழிகை அறிவிப்ப,
கொடியனார் குழப் பகற்கோயில் எய்தினான் என்க.

(557)

 

மகளிர்கள் ஒப்பனை செய்தல்

1688. தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார்.
 
     இதுமுதல், 6 செய்யுள்கள் ஒரு தொடர்.

     (இ - ள்.) தேவியர் - நம்பியின் மனைவிமார்கள், திருமணி மேனிநீர் துடைத்து -
அழகிய மணிநிறமுடைய தம்மேனியின் ஈரத்தைத் துடைத்து, ஆவி அம் துகில் -
பாலாவிபோன்று மெல்லிய அழகுடைய ஆடையை, அல்குல்மேல் உடீஇ - தம் இடையிலே
உடுத்திக்கொண்டு, காவி அம் கண்ணினார் - குவளை மலர்போன்ற அழகிய
கண்ணையுடைய அம்மகளிர்கள், காக துண்டத்தின் ஆவியால் - அகிற்புகையாலே,
ஈர்ங்குழல் - ஈரமுடைய தம் அளகக் கற்றையை, ஆவி ஊட்டினார் - மணமூட்டி
உலர்த்தினர், (எ - று.)

     நம்பியோடே பகற்கோயிலின்கட் சென்ற தேவியர் நீர்துடைத்து, ஆவியந் துகிலுடுத்து
அகிற்புகையாலே ஈர்ங்குழல் ஆவியூட்டினர், என்க.

(558)

 
1689. தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் 1சார்த்திய
2ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே.
 
     (இ - ள்.) தண் நிறத் தண்கழுநீரின் - தண்மையோடே நன்னிறமமைந்த செங்கழுநீர்
மலரோடே, நெய்தலின் - நெய்தலினது, கள்நிறக் கருங்கடையிதழும் - கள்போன்ற
நிறமுடைய கரிய கடைப்பகுதியுடைய மலரையும், பெய்து - சேரக்கட்டி, இடை - இடை
இடையே, தண் நறும் தமனகக் கொழுந்தும் சார்த்தி - குளிர்ந்த நறுமணமுடைய
மருக்கொழுந்தினையும் வைத்துப் புனைந்த, ஒண்நிறப் பிணையல் - ஒளிமிக்க நிறமுடைய
மாலையே, அன்று உவக்கப்பட்டது - அற்றை நாள் அத்தேவியரால் பெரிதும் விரும்பி
அணியப்பட்டது, (எ - று.)
 

     (பாடம்) 1 சுண்ணமும். 2 பொன்னிறப்.