பக்கம் : 1048
 

     இளமைமிக்க தேவியர் கல்லாரக் கற்றையும் குவளைத்தாமமும் தாமரை ஓலியலும்
தழீஇக் கருதற்கியலாக் கவினுடன் திகழ்ந்தனர் என்க.

 (561)

 
1692. காமரு 1நிறத்தகல் லாரக் கற்றைகள்
சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை
தேமரு குடையிலை கவிப்பத் தேவியர்
பூமரு மடந்தையர் போன்று தோன்றினார்.
 
     (இ - ள்.) காமரு நிறத்த - அவாவுதற்குக் காரணமாக நன்னிறம மைந்தவாய,
கல்லாரக் கற்றைகள் - நீர்க்குளிரியின் கற்றைகளை, சாமரையென - கவரிகளைப்போன்று,
தமர் அசைப்ப - சிலதியர் இரட்டவும், தாமரை தேம்மரு குடையிலை கவிப்ப -
தாமரையின் கட்கினிய குடைபோன்ற இலை நிழற்றவும், தேவியர் - நம்பியின்
மனைவிமார்கள், பூமருமடந்தையர் போன்று - மலரின் விரும்பி வதிகின்ற திருமகளையும்
நாமகளையும் போன்று, தோன்றினார் - திகழ்ந்தார், (எ - று.)

     பூமரு மடந்தையர் எனப் பன்மையிற் கூறலின் திருமகளும் நாமகளும் என்றாம்.

     தேவியர், தமர் சாமரை யசைப்பவும் தாமரையிலைக் குடைகலிப்பவும், பூமரு
மடந்தையர் போன்று தோன்றினர் என்க.

(562)

 
1693. தேவர்க டிசைமுகங் 2காப்பத் தீஞ்சுவை
ஆவியா ரமிர்தயின் றிருந்த வாயிடைப்
பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன்
மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார்.
 
     (இ - ள்.) தேவர்கள் திசைமுகம் காப்ப - தெய்வங்கள் எண் திக்குகளிலும் நின்று
காவல்புரிய, தீஞ்சுவை ஆவி ஆர் அமிர்து அயின்று - தீவிய சுவையுடைய நன்மணம்
பொருந்திய உண்டியினை உண்டு, இருந்த ஆயிடை - அனைவரும் இருந்த பொழுது, மா
அரசு அழித்தவன் மருங்கு - விலங்கின் வேந்தாகிய அரிமாவைக்கொன்ற நம்பியின்
பக்கத்தே, பாவையர் - தேவிமார்கள், கருங்கணால் பருகுவார்கள்போல் - தமது கரிய
கண்ணாகிய வாயாலே நம்பியின் அழகாகிய நீரைப் பருகுவாரைப் போன்று வேணவாவுடன்
கூர்ந்து நோக்கி, சுற்றினார் - சூழ்ந்து கொண்டனர், (எ - று.)

     மா அரசு அழித்தவன் - சிறந்த வேந்தனாகிய அச்சுவகண்டனை அழித்தவன்
எனவும், இரட்டுற மொழிந்து கொள்க.
 

    (பாடம்) 1 நிறைத்த. 2 கரப்பத்.