பக்கம் : 1052
 
இதுவுமது
1698. சுடர்மலைத் திருண்ட சோலைச்
     சுரேந்திர காந்த மென்னும்
வடமலை நகர மாளு
     மன்னவன் றேவி பெற்ற
தடமலர்ப் பெரிய வாட்கட்
     டையன்மற் றவளை யெங்கோன்
விடமலைத் திலங்கு செவ்வேல்
     வெய்யவன் பெயரன் வேட்டான்.
 
     (இ - ள்.) சுடர் மலைத்து இருண்டசோலை - ஞாயிற்றின் ஒளியைத் தடைசெய்து
இருண்டபூம்பொழில்கள் மிக்க, சுரேந்திர காந்தம் என்னும் - சுரேந்திரகாந்தம் என்னும்
பெயரையுடைய, வடமலை நகரமாளும் - வடமலைக்கண் உள்ள நகரத்தை ஆட்சி
செய்கின்ற, மன்னவன் தேவிபெற்ற - அரசனுடைய கோப்பெருந்தேவி ஈன்ற, தடம் மலர்
பெரிய வாள்கண் தையல் மற்று அவளை - வாவிகளில் மலராநின்ற தாமரை மலர் போலும்
வாள்போலும் பெரிய கண்களையுடைய அழகியாகிய அக்கோமகளை, எங்கோன் - எம்
மன்னனாகிய, விடம் அலைத்து இலங்கு செவ்வேல் - கொலைத் தொழிலிலே நஞ்சினையும்
வென்று விளங்காநின்ற செவ்விய வேலையுடைய, வெய்யவன் பெயரன் வேட்டான் -
அருக்ககீர்த்தி என்பவன் மணந்தனன், (எ - று.)

     அரசற்குத் தேவியர் பலரிருத்தலின் சிறப்புடைய கோப்பெருந்தேவி பெற்ற மகள்
என்பான், “மன்னவன் றேவி பெற்ற“ என்றான்.

     சுரேந்திர காந்த நகரத்தை ஆளும் மன்னன் மகளை, எங்கோன் அருக்ககீர்த்தி
மணந்தான் என்றான், என்க.

(568)

 
ஞாயிறு மறைதல்
1699. என்றவன் பெயர்த்துஞ் சொல்ல
     வின்பநீர் வெள்ள மூழ்கி
மின்றவ ழிலங்கும் வேலான்
     விஞ்சைய னவனைப் போக்கிச்
சென்றுதன் கோயில் சேர்ந்தான்
     செங்கதிர்த் திகிரி யானு
மன்றழல் சுருங்க முந்நீ
     ரலைகட லழுவம் பாய்ந்தான்.
 
     (இ - ள்.) என்று அவன் பெயர்த்தும் சொல்ல - என்று அத்தூதன் மறுபடியும் ஓதி
உணர்த்த, இன்பநீர் வெள்ளம் மூழ்கி - பேரின்பமாகிய வெள்ளத்திலே முழுகி, மின்
தவழ்ந்து இலங்கும் வேலான் - ஒளிபாய்ந்து திகழாநின்ற வேற்படையையுடைய
திவிட்டநம்பி, விஞ்சையனவனைப் போக்கி - அவ்விச்சாதரதூதனைச் சிறப்புடன் விடையீந்து
செலுத்திய பின்னர், சென்று தன் கோயில் சேர்ந்தான் - அவ்விடத்தினின்றும் போய்த் தன்
அரண்மனையை எய்தினான், அன்று - அற்றைநாள், செங்கதிர்த் திகிரியானும் - சிவந்த
சுடருடைய ஒற்றையாழியோனாகிய கதிரவனும், அழல்சுருங்க - வெப்பம் அகலுமாறு, முந்நீர்
அலைகடல் அழுவம் - மூன்று நீர்களாலே பெருகிய அலையுடைய கடலாகிய நீர்நிலையை,
பாய்ந்தான் - அடைந்தான், (எ - று.)