பக்கம் : 1054
 

     அந்திமாலையிற் றோன்றும், ஆயர் குழலிசை, பறவையின் பாடல் முதலியவற்றை.
அந்திமாலைப் பெண்ணின் மழலையங்கிளவியாகவும், செக்கர் வானத்தைச் செவ்வாயாகவும்,
உருவகித்தவாறு.

     ஞாயிறு மறைதலும் அந்திமாலை வந்ததாக. அப்பொழுது மகளிர்தம் குழற்கூட்டும்
அகிலாவியானே விசும்பு இருண்டது என்க.

(570)

திங்கட் டோற்றம்

1701. விரவின பரவைப் பன்மீன்
     மிடைமணிக் கலாப மாக
மருவின பரவை யல்குன்
     மயங்கிருட் டுகிலை வாங்கிப்
புரிவணன் மதிய மென்பான்
     பொழிகதிர்த் தடக்கை நீட்டி
இரவெனு மடந்தை செல்வ
     நுகரிய வெழுந்து போந்தான்.
 
     (இ - ள்.) விரவின பரவைப் பன்மீன் மிடைமணிக் கலாபமாக - யாண்டும் கலந்து
பரவிய பலவாகிய விண்மீன்களின் கூட்டமே செறிந்த காஞ்சியென்னும் மணியணிகலனாக,
மருவின பரவை அல்குல் - பொருந்திய கடலாகிய அல்குற் றடத்தின் மேலே, மயங்கு
இருள் துகிலை வாங்கி - பொருந்திய இருளாகிய கரிய ஆடையைக் களைந்து, புரிவணன்
மதியம் என்பான் - விரும்புதற்குரிய வெண்ணிறமுடையவனாகிய திங்கள் என்னும்
காதற்கொழுநன், பொழிகதிர் தடக்கை நீட்டி - சொரியா நின்ற தனது நிலாவொளிச்சுடர்
ஆகிய பெரிய கைகளை நீட்டி, இரவு எனும் மடந்தை செல்வம் நுகரிய - இரவு என்னும்
தன் காதலியின் புணர்ச்சிப் பேரின்பமாகிய செல்வத்தை நுகரக் கருதி, எழுந்து வந்தான் -
தோன்றி வானத்திலே வருவானாயினன், (எ - று.)

     புரிவணன் என்புழி புரி - சங்கு எனினுமாம்.

     பலவாகிய விண்மீன்களைக் கலாபமாகவும், கடலை அல்குலாகவும் உடைய, இரவு
என்னும் காதலியின் புணர்ச்சி யின்பத்தை விரும்பி, இருளாகிய அவள் துகிலைத் தனது
ஒளியாகிய கைகளாலே அகற்றித் தன் கைகளை நீட்டித் தழுவித் திங்கள் என்னும் காதலன்
வந்தான், என்க.

(571)

நம்பியின் காமவின்பச் சிறப்பு

1702. ஏரணி விசும்பி னங்கே
     1ழெழுநிலா விரிந்த போழ்தில்
சீரணி மணிவண் டார்க்குஞ்
     சிகழிகைப் பவழ வாயார்
காரணி வண்ண னென்னுங்
     கருங்களி வேழந் தன்னை
வாரணி யிளமென் கொங்கை
     வாரியுள் 2வளைத்துக் கொண்டார்.
 
 

     (பாடம்) 1 கெழினிலா. 2 வளைந்து.