பக்கம் : 1055
 

     இதுமுதல் 4 செய்யுள் ஒரு தொடர்.

     (இ - ள்.) ஏர் அணி விசும்பின் அங்கேழ் எழுநிலா விரிந்த போழ்தில் - அழகையே
அணிந்துள்ள வானிடத்தே, அழகிய நிறமிக்க நிலாவொளி பரவியபொழுது, சீர் அணி மணி
வண்டு ஆர்க்கும் - சிறந்த அழகையுடைய மணிபோன்ற வண்டுகள் ஆரவாரிக்கின்ற,
சிகழிகை பவழவாயார் - மயிர்முடியினையும் பவழம் போன்று சிவந்த வாயினையும் உடைய
தேவிமார்கள், கார் அணி வண்ணன் என்னும் - முகில்போன்ற அழகிய நிற முடையானாகிய
திவிட்டநம்பி என்னும் - கரும் களி வேழந்தன்னை - கரிய மதக் களிப்பையுடைய
களிற்றியானையை, வாரணி இளமென் கொங்கை வாரியுள் - தம்முடைய கச்சணிந்த
இளமையும் மென்மையுமுடைய முலையாகிய யானைக் கூடத்திலே, வளைத்துக் கொண்டார் -
அகப்படுத்திக் கொள்ளுவாராயினர், (எ - று.)

     வாரி - யானைக்கூடம். அவன் அவ்விடத்தினின்றும் அகலாமையின் முலையினை
வாரி என்றார்.

     விசும்பிடத்தே நிலாவிரிந்த பொழுதிலே பவழவாயார் நம்பியாகிய களிற்றியானையைத்
தம் முலையாகிய யானைக்கூடத்திலே அகப்படுத்திக் கொண்டார் என்க. இது முலைப்
போகங் கூறிற்று.

 (572)

 
 
1703. பங்கய முகத்து நல்லார்
     பவழவாய்க் கவளங் கொண்டு
பொங்கிய களிய தாகி
     மயங்கிய பொருவில் வேழம்
குங்குமப் 1பொடிநின் றாடிக்
     குவட்டிளங் கொங்கை யென்னும்
தங்கொளி மணிமுத் 2தேந்துந்
     தடத்திடை யிறைஞ்சிற் றன்றே.
 
     (இ - ள்.) பங்கயமுகத்து நல்லார் - தாமரை மலர்போன்ற அழகிய முகத்தையுடைய
பெண்மையில் நல்லாராகிய தேவியர்களின், பவழவாய் கவளங்கொண்டு - பவழம்போன்ற
வாயின் கண்ணதாகிய அதரபானம் என்னும் உணவை நன்கு உண்டு, பொங்கிய களியதாகி -
மேலும் மேலும் மிகாநின்ற களிப்பை உடையதாய், மயங்கிய - அவ்வின்பத்தே மயக்க முற்ற,
பொருவில் வேழம் - ஒப்பற்ற நம்பியாகிய களிறு,

     குங்குமப்பொடி நின்றாடி - குங்குமப்பொடியிலே முழுகி, குவட்டு இளங்கொங்கை
யென்னும் - முகட்டையுடைய இளைய முலைகள் என்கிற, தங்கு ஒளிமுத்து ஏந்தும் -
நிலைபெற்ற முத்து வடங்களை அணிந்துள்ள, தடத்திடை - சேவகத்திலே, இறைஞ்சிற்று -
தாழ்ந்துகிடந்தது, அன்று,
ஏ : அசைகள், (எ - று.)
 

     (பாடம்) 1 பொடியின். 2 தேத்தும்.