பக்கம் : 1056
 

     இதன்கண், அதரபானமும், முலைப்போகமும் கூறியவாறு. தடம், ஈண்டு யானைக்கூடம்.

     நம்பியாகிய களிறு பவழவாய்க் கவளங்கொண்டு குங்குமப்பொடியாடிக் கொங்கைத் தடத்திடைத் தாழ்ந்து கிடந்ததென்க.

 (573)

 
1704. வேய்மரு ளுருவத் தோளார்
     வெம்முலைத் தடங்க ளென்னும்
பூமரு தடத்துட் 1டாழ்ந்து
     பொற்பொடி புதைய வாடிக்
காமரு காம மென்னுங்
     கருங்கயம் படிந்து சென்று
தேமரு குழலஞ் சாயற்
     றேவிகைப் பட்ட தன்றே.
 
     (இ - ள்.) வேய்மருள் உருவத் தோளார் - மூங்கிலை ஒத்த அழகிய
தோள்களையுடைய அம்மகளிர்களின், வெம்முலைத் தடங்கள் என்னும் - விரும்புதற்குரிய
முலையிடமாகிற, பூமரு தடத்துள் தாழ்ந்து - மலர் மிக்க நீர்நிலையிலே முழுகி, பொற்பொடி
புதைய ஆடி - நறுமணப் பொற்சுண்ணம் தன் உடல் புதைப்ப ஆடி, காமரு காமம் என்னும்
- அழகிய காமவின்பம் என்கிற, கருங்கயம் படிந்து சென்று - பெரிய அல்குலாகிய கரிய
குளத்திலே திளைத்து அகன்று, தேம் மருகுழல் அம் சாயல் - தேன் பொருந்திய
கூந்தலையும் அழகிய தோற்றத்தையுமுடைய, தேவிகை பட்டது அன்றே - சுயம்பிரபை
என்னும் கோப்பெருந்தேவியின் கையிலே அக்களிறு அகப்பட்டது, அன்று, ஏ : அசைகள்,
(எ - று.)

     இஃது அல்குற் போகம் கூறிற்று.

     தோளார் வெம்முலையாகிய பூமருதடத்திற் றாழ்ந்து பொற்பொடி யாடி காமம் என்னும்
கருங்கயம் படிந்துசென்று அக்களிறு கோப்பெருந் தேவியின் கையிற் பட்டதென்க.

     கருங்கயம்-ஈண்டு அல்குல். காமவின்பத்திற்குக் காரண மான கருங்கயத்தைக்
காமமென்னும் கருங்கயம் என்று உபசரித்தார்.

(574)

 
1705. காதலா லுரிமை பாங்கிற்
     கடிகமழ் காம வல்லித்
தாதெலாந் 2தகர்ந்து சிந்தத்
     திளைத்தவத் தடக்கை வேழம்
மாதரா ளமிழ்தின் சாயற்
     றோட்டியால் வணக்கப் பட்டுப்
போதுலாம் புணர்மென் கொங்கைக்
     குவட்டிடைப் பூண்ட தன்றே.
 
 

     (பாடம்) 1 போழ்ந்து. 2 தாழ்ந்து, ததர்ந்து.