பக்கம் : 1063
 

       (இ - ள்.) தொத்து இளம் கடிமலர் துதைந்த கோதையார் - கொத்தாகிய
இளமையுடைய மணமிக்க மலர்கள் செறிந்த மாலையை அணிந்த விறலியர்,

     இளங்குமரரோடு - இளமையுடைய கூத்தரோடே, மொய்த்து - நெருங்கி, ஆடும்
முன்கடை - கூத்தாடாநின்ற தலைவாயிலின் கண், மத்தளப்பாணியும் - முழவினது
இன்னிசையும்,

மதன கீதமும் - காமச்சுவை கவினிய இயைப் பாடலும், கைத்தலத் தாளமும் - கைகளாலே
ஒற்றும் தாள ஓசையும், கலந்து இசைத்தவே - கூடி முழங்கின, (எ - று.)

     நம்பி பிறந்தமை கருதி மகிழ்ந்த நகரத்தே விறலியரும் கூத்தரும் ஆடுதலாலே
மத்தள முழக்கமும் காமப்பாடலும் கைத்தலத்தாளமும் கலந்து இசைத்த என்க.

(585)

 

இதுவுமது

1716. சிறைநகர் சீத்தன திலத முக்குடை
இறைநகர் விழவணி யியன்ற 1நீண்டு நீர்த்
துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே.
 
     (இ - ள்.) நகர்சிறை சீத்தன - அப் போதனநகரத்தே உள்ள சிறைகளிலுள்ள
குற்றவாளிகள் வீடு செய்யப்பட்டனர், திலதம் முக்குடை இறைநகர் - மேன்மை மிக்க
மூன்று குடைகள் நிழற்றா நின்ற அருகக் கடவுளின் திருக்கோயில்களிலே, விழவணி
இயன்ற - விழாக்களாகிய அழகிய செயல்கள் நிகழ்த்தப்பட்டன, நீண்டு நீர்த்துறை நகர் -
நீண்ட நீர்த்துறைகளி டத்துள்ள மண்டபங்களிலே, சுண்ணம் நெய்நாவி தூங்கின -
மணப்பொடியும் நறு நெய்யும் கத்தூரியும் மிக்கு வழங்கப்பட்டும் எஞ்சிக்கிடந்தன, நிறை
நகரவர் தொழில் - இம்மகப்பேற்றாலே மகிழ்ச்சியுற்ற அச்செல்வம் நிறைந்த போதன
நகரத்தே வாழும் மாந்தர்கள் செய்யும் அறச்செயல், நினைப்பு இகந்த - நினைந்து
கூறுதற்கியலாது மிக்கன, ஏ : அசை, (எ - று.)

     நீண்டு - நீண்ட. சிறை : ஆகுபெயர், நீர்த்துறைநகர் - நீர்த்துறைக் கண்ணுள்ள
மண்டபம்.

     அப்பொழுது சிறைப்பட்டோர் வீடு செய்யப்பட்டனர்; கோயில்களிலே விழா
நிகழ்த்தப்பட்டன; நீர்த்துறைகளிலே எண்ணெயும் சுண்ணமும் வழங்கி எஞ்சின;
அந்நகரத்தார் செய்த அறச்செயல்கள் அளவிறந்தவாயின என்க.

(586)

 

     (பாடம்) 1 தீண்டு.