பக்கம் : 1065
 

     விசயன் முதலிய ஆணினக் கிளைஞரும் தேவி முதலிய பெண்ணினக் கிளைஞரும்
அன்புடனே வந்து குழுமினர் என்க.

 (588)

 

சுற்றத்தாரின் மகிழ்ச்சி

1719. எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர்
தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும்
தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே
ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார்.
     (இ - ள்.) எழுதரு பரிதியங் குழவி ஏய்ப்பது ஓர் - குணகடலிலே தோன்றாநின்ற
அழகிய இளஞாயிற்றை ஒப்பதொரு, தொழுதகை வடிவொடு - கண்டார் வணங்குதற்குரிய
தெய்வத் தன்மையுடைய உருவத்துடனே, நம்பி தோன்றலும் - நம்பியாகிய அம்மகவு
காணப்படுதலால், தழுவினர் முயங்கினர் - அம்மகவினைக் கைகளாலே அன்புடன் தழீஇக்
கொள்வாரும், தம் மார்புடனே பொருந்த அணைத்துக் கொள்வாருமாய், முயங்கித் தம்
உளே - அணைத்துத் தம் முள்ளத்தூடே, உவகை நீர் கடலுள் - பெருகாநின்ற
மகிழ்ச்சியாகிய நீரால் நிறைந்த இன்பக் கடலிலே, ஒழிவிலர் மூழ்கினார் - இடையறாது
முழுகி இன்புற்றனர் (எ - று.)

     அவ்வாறு வந்த கிளைஞர்கள் இளஞாயிறுபோலும் தெய்வத்தன்மை யுடைய
எழிலோடே தோன்றும் அக்குழவியைத் தழுவுவாரும் அணைப் பாருமாய்த் தம்முளே
மகிழ்ச்சிமிக்கு இன்பக் கடலிலே மூழ்கினர் என்க.

(589)

 
1720. அறத்தகை யந்தணர் குழுவு 1மாடல்வேன்
மறத்தகை மன்னர்தங் குழுவு மாநகர்த்
திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
2பொறுத்தனர் பொலிவுரை புடைபொ ழிந்ததே.
 
     (இ - ள்.) அறத்தகை அந்தணர் குழுவும் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை
பூண்டொழுகும் அறத்தகுதியுடைய அந்தணர் கூட்டமும், ஆடல்வேல் மறத்தகை மன்னர்
தம் குழுவும் - பகை வெல்லும் வேற்படையாலே சிறப்புற்ற மறத்தன்மையுடைய அரசர்
குழாமும், மாநகர் திறம்தகு முதியரும் - ஏனைய பெரிய நகரத்தே வாழ்கின்ற சான்றாண்மை
மிக்க பெரியோரும், ஈண்டி - எய்தி, செல்வனைப் பொறுத்தனர் - அம்மகவினை
ஏந்தியவராய், பொலிவுரை - வாழ்த்தா நின்ற மொழிகள், புடை பொழிந்ததே - பக்கத்தே
மழைபோன்று பொழிவுற்றது, (எ - று.)
 

     (பாடம்) 1 மானவேன். 2 பொறுத்தவர்.