பக்கம் : 1069
 

     (இ - ள்.) பொலிகென - வாழ்க என்று வாழ்த்தி, அம் மகளிர் அவ்விச்சாதர
மடந்தையர், புரவலன் - திவிட்டநம்பியினுடைய, பொன் செய் நீள் முடி -
பொன்னாலியன்ற நீண்ட முடியின்மிசை, மலிதரு நறுநெய் பெய்தலும் - மிக்க நறிய
நெய்யைப் பொழிந்தனராக, கலிதரு கனைகடலன்ன காதலோடு - முழங்குகின்ற பெரிய
கடல்போன்ற விருப்பத்துடனே, ஒலிதரு நகை ஒலி - முழங்காநின்ற உவகை ஆரவாரம்,
உவந்து எழுந்தது - மகிழ்ச்சியோடே மிக்கது, (எ - று.)

     வந்த விச்சாதர மகளிர் நம்பியின் முடியிலே நெற் பெய்தனர் என்க.

     மகப் பேற்றுச் செய்தியை அறிவிப்போர் நெய்யொடும் சுண்ணத்தோடும் செல்லலும்,
சென்று அறிவிக்க வேண்டியோர் தலையில் நெய் பெய்தலும் மரபு ஆகலின், நெய் பெய்த
அளவானே, நற்செய்தி என அறிந்து மகிழ்ந்தனர் என்க.

 (596)
 
விச்சாதர தூதன் கூறுதல்
1727. நாவிகா 1றழுவிமன் னறுநெய் யாடிய
பாவைமார் தங்களைப் பாவை கோயிலுக்
கேவியாங் கிருந்தபி னிறைவற் கின்னணம்
தேவிகோன் 2றமன்றொழு தொருவன் செப்பினான்.
 
     (இ - ள்.) மன்நாவி கால் தழுவி நறுநெய் ஆடிய பாவைமார் தங்களை - திவிட்ட
மன்னனைக் கத்தூரி விரவப்பெற்ற நறிய நெய்யாட்டிய விச்சாதர மகளிரை, பாவை
கோயிலுக்கு - சுயம்பிரபையின் மாளிகைக்கு, ஏவி - செல்லும்படி விடை கொடுத்து, ஆங்கு
- அவ்விடத்தே, இருந்தபின் - வீற்றிருந்த பின்னர், இறைவற்கு - அத் திவிட்ட
வேந்தனுக்கு, தேவிகோன் தமன் ஒருவன் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின்
தூதன் ஒருவன்,தொழுது - வணங்கி,இன்னணம் - வருமாறு, செப்பினான் - கூறலானான்,
(எ - று.)

     நெய்யாட்டிய தூதியரை நம்பி சுயம்பிரபையின் அரண்மனைக்குச் செல்லப்
பணித்திருக்கும்போது, அவ்விமானத்தே வந்த தூதன் பின் வருமாறு கூறினன், என்க.

(597)

 

தூதன் சோதிமாலைக்கு மகப் பிறந்தமை கூறல்

1728. எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே.
 

     (பாடம்) 1 றுழுவிமன். 2 றமந்தொழு.