பக்கம் : 1071
 

     (இ - ள்.) தெண்கதிர் திருமணி - தெளிந்த நிலாச்சுடருடைய அழகிய
வான்மணியாகிய திங்கள்மண்டிலம், கனவில் சேர்ந்த பின் - இவ்வாறு தன் கனவிலே
எய்தியதாய்க் கண்ட பின்னர் இளமுலை - சோதிமாலையின் இளமையுடைய முலைகளின்,
கண் கதிர்த்து - முகம் ஒளிபெற்று, கால் பணைத்தன - அடி பருத்தன, தண்கதிர் தமனியப்
பாவைபோல்வதோர் - தண்ணிய ஒளியையுடைய பொற்பதுமையைப் போன்றதொரு, ஒண்
கதிர் உருவம் திருமகள் எய்தினாள் - ஒள்ளிய சுடர் உடைய வடிவத்தை அத்திருமகளை
ஒத்த சோதிமாலை அடைந்தனள், (எ - று.)

     அக் கனாவினைக் கண்டபின்னர் முலை கண் கதிர்த்துத் தமனியப் பாவைபோல்
கருக்கொண்டு திகழ்ந்தாள் என்க,

(600)
 
சோதிமாலையின் வயா வருத்தம்
1731. வானிவர் மணிநகை விமான மேறவும்
கானிவர்கெற்பகச் சோலை காணவும்
மானிவர் நோக்கினாள் வயாவி னாளது
தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே.
 
     (இ - ள்.) வான் இவர் மணிநகை விமானம் ஏறவும் - விசும்பிடத்தே இயங்குகின்ற,
மணி ஒளியுடைய விமானத்திலே ஏறிச்செல்லவும், கான் இவர் கற்பகச்சோலை காணவும் -
மணந்தவழுகின்ற கற்பகப் பூம்பொழிலைப் பார்க்கவும், மான் இவர் நோக்கினாள் -
மான்கள் தன்னினம் என்று கருதி அணுகுதற்குக் காரணமான கண்களையுடைய
சோதிமாலை, வயாவினாள் - வேணவாவுற்றாள், அது - அவ்வாசைதானும், தேன் இவர்
அலங்கலாய் - வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையணிந்த நம்பியே, தீர்க்கப்பட்டது -
வானவூர்தியில் ஊர்வித்தும் கற்பகக்கானம் காட்டியும் தீர்க்கப்பட்டது, (எ - று.)

     கருக்கொண்ட சோதிமாலை விமானமேறவும் கற்பகச் சோலை காணவும் அவாவினள்
ஆகலின் அங்ஙனமே ஏற்றியும் காட்டியும் அவ்வயாத் தீர்க்கப்பட்டது என்க.

     வயா - கருக் கொண்ட மகளிர்க்கு உண்டாகும் ஆசை.

 (601)

 
சோதிமாலை கருவுயிர்த்தல்
1732. மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
கோணிற்கும் விசும்பிடைக் குழவித் திங்களும்
நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான்.