பக்கம் : 1072
 

       (இ - ள்.) மாணிக்கம் அரும்பிய - மாணிக்கம் என்னும் மணிகள் ஒளிவிடுகின்ற,
வண்பொன் மாநிலத்து - வளவிய பொன்மயமான மலை நிலத்திலே, ஆணிப்பொன்
அனையவள் - மாற்றுயர்ந்த பொன்னை நிகர்த்த சோதிமாலை, அனையள் ஆயபின் -
அவ்வாறாயின பின்னர், கோள்நிற்கும் விசும்பிடை - கோள்கள் உளவாகிய வானிடத்தே,
குழவித் திங்களும் - இளந் திங்களும், நாணிப்போம் உருவொடு - நாணுதற்குரிய
பேரொளியோடே, நம்பி தோன்றினான் - திருமகன் பிறந்தனன், (எ - று.)

     ஆணிப் பொன் - உறையிடப்பட்ட பொன், ஆணி - கட்டளை.

     குழவித் திங்கள் என்றது - குழவிஞாயிறு என்றாற் போன்று கீழ்த் திசையிலே
தோன்றும் முழுத்திங்களை என்க; பிறையை யன்று.

     சோதிமாலைக்குத் திங்களும் நாணும் எழிலுடன் நம்பி தோன்றினான் என்க.

(602)

 

அம் மகவின் மாண்பு

1733. தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
பூமரு தமனியக் குழவி போலுமே.
 
     (இ - ள்.) தேம் மரு செங்கழுநீரின் - தேன் பொருந்திய செங்கழுநீர் மலர்போன்ற,
செவ்விதழ் - செவ்விய உதடுகளையும், காமரு பவழவாய் - விரும்புதற்குரிய பவழம்
போன்ற திருவாயினையும், தாமரை அக இதழ் புரையும் கமழும் கண்மலர் - தாமரையினது
அகவி தழை நிகர்த்த மணமுடைய கண்களாகிய மலரையும் உடைய, தானும் -
அக்குழவிதானும், ஓர் பூமரு தமனியக்குழவி போலுமே - ஒப்பற்ற அழகிய பொன்
மகவுபோன்று திகழ்ந்தது, (எ - று.)

     அம்மகவு செங்கழுநீர் மலர்போன்ற செவ்விதழும் பவழவாயும் தாமரைபுரையும்
கண்ணும் உடையதாய்த் தமனியக் குழவி போலும் என்க.

(603)

 

அப்பொழுது நிகழ்ந்த ஆரவாரம்

1734. வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே.