பக்கம் : 1076
 

      முழுதையும் கவராநின்ற ஒளியை உடைய குளிர்ந்த திங்கள் மண்டிலம் வளர்வது
போன்று, விரிவெய்தி - வளர்ச்சியுற்று, மண்கவர் சோதி - மண்ணுலகத்தை முழுதும்
கவர்ந்துகொள்ளற்கியன்ற ஒளியையுடைய, தண் கதிர்வண்ணன் - குளிர்ந்த திங்கள்
வண்ணனாகிய விசயன், வளர்கின்றான் - வளரா நின்றான், (எ - று.)

     விசயன் தெய்வம் காப்பவும், வாழ்த்தவும், தண்கதிரோன்போல் விரிவெய்தி
வளர்கின்றான் என்க.

(609)
 
இதுவுமது
1740. செம்பொற் கோவைக் கிண்கிணி யேங்கத் திலதஞ்சேர்
1அம்பொற் கோவைப் பன்மணி மின்னிட் டரை 2சூழப்
பைம்பொற் கோவைப் பாடக மென்சீ றடிநல்லார்
தம்பொற் கோவைப் பூண்முலை முன்றிற் றவழ்கின்றான்.
 
     (இ - ள்.) செம்பொன் கோவை கிண்கிணி யேங்க - செம் பொன்னாலியற்றப்பெற்ற
மாலையும் கிண்கிணி என்னும் சதங்கை அணிகலன்களும் ஒலிப்பவும், திலதம்சேர்
அம்பொன் கோவைப் பன்மணி மின் இட்டு அரை சூழ - மேன்மைமிக்க அழகிய பொன்
ஞாணிலே கோக்கப்பட்டுப் பலவாகிய மணிகளாலியன்ற கோவை ஒளிர்ந்து இடையிலே
சூழவும், பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார் தம் - பசிய
பொன்மாலையினையும் பாடகம் என்னும் காலணியையும் அணிந்த மெல்லிய
சிற்றடிகளையுடைய மகளிர்களின், பொற்கோவைப் பூண்முலை - பொன்மாலை பூண்ட
முலையாகிய, முன்றில் தவழ்கின்றான் - முற்றத்திலே தவழ்ந்து பயில்வானாயினான்,
 (எ - று.)

     விசயன் கிண்கிணி ஏங்கவும் அரைசூழவும் நல்லார் முலைமுன்றிலில் தவழ்கின்றான்
என்க. மகளிர் - நற்றாய் செவிலித்தாய் முதலியோர் தவழ்கின்றான் என்றதற்கேற்ப
முலைமுன்றில் என்றார்.

(610)

 
இதுவுமது
1741. போதார் பொய்கைப் போதவிழ் பொற்றா மரைகாட்டி
மாதார் சாயன் மங்கையர் கூவ மகிழ்வெய்திக்
3காதார் செம்பொற் றாழ்குழை மின்னின் கதிர்வீசத்
தாதார் பூவின் றண்டவி சேறித் தவழ்கின்றான்.
 

    (பாடம்) 1செம்பொற் கோவை. 2டவைசூழ. 3 தாதார்.