பக்கம் : 1077
 

       (இ - ள்.) போது ஆர் பொய்கை - மலர்கள் நிறைந்த வாவியிடத்தே, போது
அவிழ் பொன தாமரை காட்டி - இதழ்கள் விரிந்த பொற்றாமரை நாண்மலரின்
பொலிவினைக் காட்டி, மாது ஆர் சாயல் மங்கையர் கூவ - அழகு பொருந்திய
தோற்றமுடைய தாயர்கள் அன்புடனே அழைப்ப, மகிழ்வெய்தி - மிக்க மகிழ்ச்சி
எய்தியவனாய், காது ஆர் பொன் தாழ்குழை மின்னின் கதிர்வீச - தன் செவியிலே
பொருந்திய பொன்னாலியன்ற தூங்குகின்ற குண்டலங்கள் மின்னலைப்போன்று ஒளி
வீசும்படி, தாது ஆர் பூவின் தண் தவிசு ஏறித் தவழ்கின்றான் - பூந்துகள் பொருந்திய
மலர்களா லியற்றப்ட்ட குளிர்ந்த அணையின் மேலே தவழ்ந்து ஆடுவானாயினன்,
(எ - று.)

     பொய்கையிற் பொற்றாமரை காட்டி மங்கையர் அழைப்ப மகிழ்ந்து குழை கதிர்வீச
பூவின் தண்டவிசு ஏறித் தவழ்கின்றான் என்க.

(611)

இதுவுமது

1742. கண்ணின் செல்வங் கண்டவர் கண்டே மனம்விம்ம
மண்ணின் செல்வம் வைகலும் வைகன் மகிழ்வெய்தி
விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித்
தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றான்.
 
     (இ - ள்.) மண்ணின் செல்வம் - இம்மண்ணுலகம் தவம் ஆற்றி எய்திய செல்வத்தை
ஒத்த விசயன், வைகலும் வைகல் - நாள்தோறும், மகிழ்வெய்தி - இன்புற்று, கண்டவர் -
தன்னைப் பார்த்தவர்கள், கண்ணின் செல்வம் கண்டே - கட்பொறி நுகர்தற்குரிய
காட்சியின்பம் முழுதையும் தன்னிடத்தே கண்டு நுகர்ந்து, மனம் விம்ம - உள்ளம் விம்மி
தமுறா நிற்ப, விண்ணின் செல்வச் செங்கதிரோன்போல் - விசும்பினது செல்வமாகிய
செவ்விய ஒளிப்பிழம்பாகிய ஞாயிற்றைப்போன்று திகழ்ந்து, விளையாடி -
விளையாட்டயர்ந்து, தண் என் செல்கை பொன் உருள் வாங்கித் தளர்கின்றான் - மெல்லிய
இயக்கமுடைய பொன் தேர் உருட்டி தளர் நடை பயிலாநின்றான், (எ - று.)

     பொன் உருள் - பொன் தேர். தண்ணென் செல்கை என்புழித் தண்மை மென்மைப்
பண்பின்மேனின்றது.

     விசயன் தன்னைக் கண்டவர் கண்ணின் செல்வங் கண்டாராய் மனம் விம்ம
நாடோறும் மகிழ்வெய்திக் கதிரோன்போல் பொற்றேருருட்டித் தளர்நடை பயின்றான் என்க.

(612)

 

விசயனுக்குக் கலை பயிற்றல்

1743. ஐயாண் டெல்லை யையனணைந்தா னவனோடு
மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
நெய்யார் செவ்வே 1னீளொளி நேமிப் படையானே.
 

     (பாடம்) 1 னீரொளி.