பக்கம் : 1091
 

சுயம்வர முரசறைகெனல்

1762. அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர்
கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
திருத்தகு 1சுயம்வர முரசந் திண்களிற்
றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான்.
 
     (இ - ள்.) அருத்தம் நூலவரொடும் ஆய்ந்து - பொருள் பொதிந்த மெய்ந்நூற் பயிற்சி
மிக்க அமைச்சர்களுடனே ஆராய்ந்து, மற்றவர் கருத்தொடு பொருந்திய கருமச்
சூழ்ச்சியான் இறைவன் - அவ்வமைச்சர்களுடைய கருத்துடன் ஒத்த ஆள்வினைத்
திறமுடைய திவிட்ட மன்னன், திருத்தகு சுயம்வர முரசம் - மாண்புமிக்க சுயம்வரச்
செய்தியை அறிவித்தற்கியன்ற முரசினை, திண் களிற்று எருத்தின்மேல் அறைகென -
திண்ணிய அரசுவாவின் எருத்தின்மேல் ஏறியிருந்து முழக்கி அறிவிப்பீராக என்று,
ஏயினான் - முரசறை மரபினர்க்குப் பணித்தான், (எ - று.)

     சோதிமாலைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தித் திருமணம் புரிவித்தலே சிறப்புடைத்தென,
அமைச்சர்களைக் கலந்தெண்ணியதில் முடிவேற்பட்டமையின் சுயம்வரமுரசு அறையச்
செய்தனன், என்க.

(632)

 
1763. வாலிய 2சந்தமென் சேறு மட்டித்துப்
பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன
3பாலியல் பலிபெறு முரசம் 4பண்மையில்
ஆலியங் கதிர்கொள வதிர்ந் தறைந்தவே.
 
     (இ - ள்.) வாலிய சந்த மென் சேறு மட்டித்து - தூய்மையுடைய, சந்தனத்தின்
மென்மைமிக்க குழம்பை நீவி, பீலி அம் தழையொடு - மயிற்பீலியும் அழகிய தழையும்,
பிணையல் வேய்ந்தன - மலர்மாலையும் சூட்டப்பட்டனவாகிய, பாலியல் பலிபெறு முரசம் -
ஆன்பாலானியன்ற பலியைக் கொள்ளும் முரசங்கள், பண்மையில் - இனிமையோடே, ஆலி
அதிர் கொள - ஆரவாரித்து அதிரும்படி, அதிர்ந்து அறைந்த - அதிர்ந்து முழுங்கின,
(எ - று.)

     சோதிமாலையின் சுயம்வரச் செய்தியைப் பலிபெறு முரசம் அதிர்ந்து முழங்கி
அறிவித்த தென்க.

(633)

 

     (பாடம்) 1 சயம்வர. 2 சந்தன. 3 பரவியல். 4 பன்மையில்.