பக்கம் : 1098
 

     (இ - ள்.) பளிங்குஇயல் பலகையும் - பளிங்கினால் இயன்ற பலகைகளாலும்,
பவழத்தூண்களும் - பவழத்தாலியன்ற தூண்களாலும், விளங்கு பொற் கலங்களும் -
திகழ்கின்ற பொன்னாலாய அணிகலன்களாலும், வெள்ளி வேயுளும் - வெள்ளித் தகடுகளால்
வேயப்பட்ட மாடங்களாலும், இளங்கதிர் முத்தமும் - நெகிழ்ந்த ஒளியுடைய
முத்துக்களாலும், இயற்றி - இயற்றப்பட்டு, வளம் கவின்று அனையது - வளமே ஓர்
அழகுடைத்தாயது போன்றது, அம்மதலை மாடமே - அந்த மதலை மாடம், ஏ : அசை,
(எ - று))

     அம் மதலை மாடம் பளிங்குப் பலகையும், பவழத்தூண்களும், பொற்கலன்களும்,
வேயுளும் முத்தமுமியற்றிய வளங்கவின்றனைய தென்க.

(645)
 
1776. மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப்
பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை
மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான்
1நான்முக மருங்கினு நகுவ தொக்குமே.
 
     (இ - ள்.) மீன்முக விசும்பிடை - உடுக்களையுடைய இடமிக்க விசும்பினிடத்தே
தோன்றி, விரிந்த பால் வெண்ணிலா முகம் தொகுப்பு அன - விரிதலையுடைய பால்
போலும் வெள்ளிய நிலாவொளியை ஒருமுகம்படத் திரட்டியது போன்று, பனிக்கும்
வேதிகை- நீரைத் துளிக்கும் சந்திரகாந்தத் தாலாய மேடை, மேல்முகந் திருத்திய
வெள்ளிமுன்றிலான் - தன்மேற் புறத்தே சீர் செய்யப்பட்ட வெள்ளித்தகடுகள் பதித்த
முன்றிலிடத்தே நின்று, நான்முக மருங்கினும் நகுவது ஒக்கும் - நான்கு திசைகளினும்
சிரிப்பதுபோற் றோன்றும், (எ - று.)

     நிலாவை தொகுத்து வைத்தது போன்று நீர்காலும் வேதிகை, முன்றிலிடத்தே நின்று
நகுவது போலும் என்க.

(646)

 
1777. அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.
 

     (பாடம்) 1 நாண்முக.