பக்கம் : 1104
 

வாரணவாசி மன்னன் வருகை

1787. ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான்.
 
     (இ - ள்.) ஊழி காண்பரிய தோன்றல் - இறுதியில்லாத புகழையுடைய, உக்கிரகுலத்து
வேந்தன் - உக்கிரமரபிற் பிறந்த மன்னனும், வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி
மன்னன் - வாழைமரங்கள் செழித்துத் தங்குதலையுடைய பொழில்கள் சூழ்ந்த
வாரணவாசியை ஆள்பவனும் ஆகியவன், சூழி மால் யானை உந்தி - முகபடாம் அணிந்த
பெரிய யானையை ஊர்ந்து, சுடர்குழை திருவில் வீச - சுடருகின்ற குண்டலங்கள் சிறந்த
ஒளியைப் பரப்பவும், ஏழையர் கவரி வீச - மகளிர்கள் தாமரை இரட்டவும், எழில் நகர்
இசைப்ப - அழகிய நகர மாந்தர் புகழவும், சென்றான் - செல்வானாயினான், (எ - று.)

     தோன்றல் - புகழ். உக்கிரகுலத்தே தோன்றி இறுதியில்லாப் புகழுடையனாய்,
வாரணவாசியை ஆள்கின்ற மன்னன் யானையுந்தி வில் வீசக் கவரிவீச இசைப்பச்
சென்றான் என்க.

     உக்கிரகுலம் ஐம்பெருங் குலத்துளொன்று.      

(657)

 

சூரியபுரத்துத் தோன்றல் வருகை

1788. சொரிமதுக் கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
அரிகுலத் தரசர் கோமா 1னவிர்மணி யாரந் தாங்கிப்
பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான்.
 
     (இ - ள்.) சொரிமது கலந்த சோலை - பொழிகின்ற தேன் விரவிய
பொழில்களையுடைய. சூரியபுரமது ஆளும் - சூரியபுரத்தை ஆளும் மரபினராகிய,
அரிகுலத்து அரசர் கோமான் - அரி குலத்துட்டோன்றிய மன்னர்மன்னன்,
அவிர்மணி யாரம் தாங்கி - விளங்குகின்ற மணிவட மணிந்தவனாய், பொருமலைப்
பகடு நுந்தி - போர்த்தொழில் புரியும் மலையை ஒத்த களிற்றி யானையை ஊர்ந்து, புயல்
அலைத்து இருண்டு வீழ்ந்த புரிமலர் குஞ்சி தாழ - முகிலைத் தோற்கச் செய்வதாய்
இருண்டு சரிந்த மலர் சூட்டப்பெற்ற தலைமயிர் தாழ்ந்து கிடப்ப, பொன்நகர் புகழப்
புக்கான் - அழகிய நகரம் புகழும்படி சயமர மண்டபத்தே புகுந்தான் ;
(எ - று.)
 

     (பாடம்) 1 னருமணி.