பக்கம் : 111
 

     எனவே அவன் பெயர் சுவலனசடி என்றாராயிற்று. அவனுடைய பெருமை எடுத்துக்
கூறுவதற்கு அருமையானது என்பதாம். “இப்பால் விஜயார்த்த பர்வத தக்ஷிணறோணியில்
ரதநூபுர சக்கரவாள நகரத்து நமிஸந்தாநத்து வித்யாதர ராஜா, ஜ்வலநஜடி மஹாராஜன்“
என்பது ஸ்ரீபுராணம். சுவலன - என்னுஞ்சொல்லை அழற்பெயர் எனத் தமிழில்
மொழிபெயர்த்தார்.
 

( 19 )

சுவலனசடியின் பெருமை

138. இங்கண் ஞால மெல்லைசென் றிலங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்திறைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்டறைந்து குங்கு மக்கு ழம்பளாய்
1அங்க ராக மங்கணிந்த லர்ந்த வார மார்பினான்.
 
     (இ - ள்.) கொங்கு கொண்டு வண்டு அறைந்து - தேனையுண்டு வண்டுகள்
ஆரவாரிக்கப்பெற்று; குங்குமக் குழம்பு அளாய் - குங்குமக் குழம்பு மிகப்பூசப் பெற்று;
அங்கராகம் அங்கு அணிந்து - மணப்பொருளும் அதன்மேல் அமைந்து; அலர்ந்த -
பரந்த; ஆரமார்பினான் - மாலைகளை யணிந்த மார்பையுடையவன்; இங்கண் ஞாலம்
எல்லை சென்று - இந்த உலகத்தின் எல்லை எவ்வளவு உண்டோ அவ்வளவு வரையிலும்
பரந்து சென்று; இலங்கு வெண் குடை நிழல் - விளங்குகின்ற வெண் கொற்றக் குடையின்
நிழலிலே; வெங்கண் யானை வேந்து இறைஞ்ச - அச்சத்தைத்தருங் கண்களையுடைய
யானைப்படையுள்ள அரசர்கள் வணங்குமாறு; வென்றியின் விளங்கினான் - வெற்றியிலே
மேமபட்டுச் சிறந்து திகழ்ந்தான். (எ - று.)

     இச்செய்யுளின் முன்னிரண்டடிகளில் சுவலனசடியின் அரசாட்சிச் சிறப்பும் வெற்றிச்
சிறப்பும் கூறப்பட்டன. பின்னிரண்டடிகளில் மார்பின் செயற்கையணிநலம் கூறப்பட்டது.
இங்கண் ஞாலம் - இவ்விடமாகிய உலகம். அங்கராகம் - மார்பில் பூசப்பெறும் நறுமணக்
கலவைகள்.
 

( 20 )


     (பாடம்) 1. அங்க ரங்க மங்கணிந்த.