பக்கம் : 1131
 

இதுவுமது

வேறு

1823. கடாமிகு களிநல் யானைக் கவுளிழி கான வீதி
விடாமிகை சுழன்று வீழும் விரைகவர் மணிவண் டேபோல்
படாமுகக் களிற்றி னான்றன் பவழக்குன் றனைய மார்பில்
தடாமுகை யலங்க றன்மேற் றையல்கண் சரிந்த வன்றே.
 
     (இ - ள்.) களிநல் யானை கவுளிழி மிகு கடாம் - மதக் களிப்புடைய நல்ல
யானையினுடைய கவுளினின்றும் பொழிகின்ற மிக்க மதநீர் பொருந்திய, கான வீதி -
மணமுடைய தெருவினை, விடா மிகை சுழன்று வீழும் - விடாதனவாய் மிகுதியாகச் சுற்றிச்
சுற்றி வீழ்தலையுடைய, விரைகவர் மணிவண்டே போல் - அம்மத மணத்தினைக்
கவருகின்ற நீலமணி போன்ற வண்டுகளைப் போன்று, படாமுகக் களிற்றினான்றன் -
முகபடாமணிந்த அரசு வாவினையுடைய, அமிததேசனுடைய, பவழக்குன்று அனைய
மார்பில் - பவழமலையை ஒத்த மார்பின்கண், தடாமுகை அலங்கல் தன்மேல் -
தாழியிலிட்டு வளர்த்த குவளை மொட்டுக்களால் பிணையப்பட்ட மலர்மாலையின் மேலே,
தையல் கண் சரிந்த அன்றே - சோதிமாலையின் கண்கள் வீழ்ந்தன, (எ - று.)

     தடா - தாழி.

     யானையின் மதநீர் மிக்குப் பொழிந்த வீதியை விடாது மொய்க்கும் வண்டுகளைப்
போன்று சோதிமாலையின் கண்கள் பவளக் குன்றனையான் மார்பிலிட்ட மாலை மேலே
வீழ்ந்தன என்க.

     சரிந்தன என்றார், தம்வய மிழந்து வீழ்தலை யுணர்த்த.

(693)

 

இதுவுமது

1824. ஏட்டினார் குழலி னாளுக் குழையவ ளின்ன னென்று
காட்டினா ளாவ தல்லாற் காரிகை தன்னின் முன்னம்
ஓட்டினா ணிறையுங் கண்ணு முள்ளமுங் 1களித்த தங்கே
பாட்டினா லென்னை போக பான்மையே 2பலித்த தன்றே.
 
     (இ - ள்.) ஏட்டின் ஆர் குழலினாளுக்கு - இதழ்களாலே நிரப்பப்பட்ட
அளகத்தையுடைய சோதிமாலைக்கு, உழையவள் - தோழி, இன்னன் என்று -
இவ்வமிததேசன் இத்தகையன் என்று காட்டினாள் ஆவது அல்லால் - கூறிக்காட்டினாள்
அத்துணையே யல்லது, காரிகை - சோதிமாலை, முன்னம் - அத்தோழி கூறிக்காட்டற்கு
முன்னரே, தன்னின் - தன்னிடத்திருந்து, நிறையும் கண்ணும் ஓட்டினாள் - நிறையையும்
கண்களையும் அவனிடத்தே செலுத்தினாள், உள்ளமும் அங்கே களித்தது - அவள்
நெஞ்சமும் அவ்விடத்தே பெரிதும் மகிழ்ந்தது, பாட்டினால் என்னைபோக - ஒருவற்குத்
தனது முயற்சி மாத்திரையானே யாதுண்டாம், அஃதொழிக, பான்மையே பலித்தது - ஊழின
படியே பயனும் பொருந்திற்று, (எ - று.)
 

     (பாடம்) 1 கழித்த. 2 பழுதன்றே காண், பழுத்ததன்றே.