உண் இலாப் பல வாய் உளவாயின - உண்ணுதலற்ற பல வாய்கள் உளவாயிருந்தன; அவையாவை எனின்; கண் அனார் ஒடுகாமக் கலங்கள் - கண்ணையொத்த காதலர்களொடு இன்பம் நுகரப்பெறாத காமக்கலங்களாகிய பரத்தையர் வாய்களேயாம், (எ - று.) சுவலனசடியின் ஆட்சிக்காலத்தில் அந்நாட்டில் பசியினால் வருந்தினார் எவரும் இலர். காமக்கலங்களாகிய பரத்தையர்களின் வழியிலே ஒழுகுவார் எவரும் இலராயினார். ஆகவே அப்பரத்தையர் கண்ணன்ன காதலரோடு காமச்சுவையை உண்டுகளிக்கும் வாயற்றுத் திகைக்கின்றனர். காமக்கலங்கள் - காமப்பொருள் வைக்கப்பட்ட பாத்திரங்களைப் போன்றவர்களாகிய பரத்தையர்கள். |
( 25 ) |
அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார் |
144. | மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல் நோக்கி 1வைக நுனித்தவ னாண்டநாள் தாக்க ணங்கனை யார் 2தம தாயரால் வீக்கப் பட்டன 3மென்முலை விம்முமே. |
(இ - ள்.) மாக்கண் வையம் - பேரிடத்தையுடைத்தாகிய இவ்வுலகத் துயிர்கள்; மகிழ்ந்து தன் தாள் நிழல் நோக்கி வைக - மகிழ்ச்சியுடன் தன் அடி நிழலிலே தங்கியிருக்கும்படி; நுனித்து அவன் ஆண்டநாள் - நுட்பமான உணர்வுடன் அவன் அரசாட்சி செய்த காலத்திலே; தாக் கணங்கு அனையார் மென்முலை - தீண்டி வருத்தும் தெய்வ மகளிரை ஒத்த மங்கையரின் மெல்லிய கொங்கைகள்; தம தாயரால் - தம்முடைய தாயார்களுடைய கையினால்; வீக்கப் பட்டன விம்மும் - கட்டுப்பட்டவைகளாக வருந்துதலை யடையும், (எ - று.) சுவலனசடியின் ஆட்சிக் காலத்தில் அந்நாட்டிற் கட்டப்பட்டு வருந்தினார் எவரும் இலர். கட்டப்பட்டு வருந்துதலை யடைந்தவைகள் அழகிய மங்கையர்களின் கொங்கைகளே என்க. |
( 26 ) |
|
(பாடம்) 1. வைய. 2 தமைத்தாயரால். 3. மே முலை. |