பக்கம் : 1161
 

      (இ - ள்.) அருள்புரி - உயிர்களிடத்தே அருள் பொழிகின்ற, அழல் அம் சோதி
ஆழியான் - தீப் பிழம்புபோன்ற அழகிய ஒளியையுடைய அறவாழி அந்தணன்,
ஆதியில்லான் - தனக்கொரு முதலில்லாதவன், மருள்புரி வினைகட்கு என்றும் மறுதலையாய
வாமன் - மயக்கத்தைச் செய்கின்ற ஞானாவரணீயம் முதலிய வினைகட்கு எப்போதும்
முரண் ஆயவனாகிய வாமன் என்னும் திருப்பெயரையுடையோன், இருள்புரி உலகம் சேரா
இயல்நெறி பயந்த பெம்மான் - இருள்சேர் இன்னாத் தருகின்ற வுலகத்தே பிறவாதபடி
செல்லுதற்குரிய நன்னெறியைக் கூட்டும் மேலான மெய்ந்நூலினை உரைத்தருளிய பெருமான்
என்று கூறப்படுகின்ற அருகக்கடவுளின், பொருள் புரி விழவு - மெய்ப்பொருள்
உணர்ச்சிதரும் விழாவினை, காண்பார் - விழைவுடனே காண்பவர்கள், புண்ணிய உலகம்
காண்பார் - புண்ணிய உலகங்களிலே சென்று பிறப்பார்கள், (எ - று.)

     ஆழியான் ஆதியில்லான் வினைகட்கு மறுதலையாய வாமன் இயல்நெறி பயந்த
பெம்மான் பொருள்புரி விழவினை விரும்பிக் காண்போர் கற்ப உலகங்களிலே பிறந்து
இன்புறுவர் என்க.

 (736)

 
 
1867. கண்ணிய வறியன் செல்வ
     விழவினுட் களித்த மாந்தர்
புண்ணியத் துகள்க ளென்னும்
     பொற்சுண்ணம் புதைய வாடிப்
பண்ணியன் மொழியி னார்தங்
     கருங்கண்ணாற் பருகு நீர்மை
விண்ணிய லுருவ மெய்தி
     விளங்கிவீற் றிருப்ப ரன்றே.
 
     (இ - ள்.) கண்ணிய - சான்றோர்களாற் கருதப்பட்ட, அறிவன் - அருகனுடைய,
செல்வ விழவினுள் - சிறந்த விழா நிகழ்ச்சியிலே எழுந்த, புண்ணியத்துகள்கள் என்னும் -
அறப்பயனுடைய துகள்கள் என்று கூறப்படுகின்ற, பொற்சுண்ணம் புதைய ஆடி -
பொற்பொடி தம்முடல் போர்ப்ப அவற்றுள் முழுகி, களித்த மாந்தர் - அவ்விழாக்
காட்சியிலே மகிழ்ச்சி கொண்ட மானிடர்கள், பண் இயல் மொழியினார்தம் - பண் போன்ற
இனிய மொழிகளையுடைய மகளிருடைய, கருங்கண்ணாற் பருகும் நீர்மை - கரிய
கண்களாலே விரும்பிப் பருகும் தன்மையை உடைய, விண் இயல் உருவம் எய்தி -
விண்ணோர்க்கியன்ற அழகிய உருவத்தை அடைந்து, விளங்கி - புகழான் விளக்கமுற்று,
வீற்றிருப்பர் அன்றே - அல்லலின்றி அமர்ந்து வாழ்வார்கள், (எ - று.)

     அறிவனுடைய செல்வ விழவினுள், களித்த மாந்தர் அழகுடைய உருவம் பெற்று
விளக்கமுடையராய் நீடு வாழ்வார் என்றபடி.

(737)