பக்கம் : 1163
 

     (இ - ள்.) இன் இசை முரசம் கேட்டே - இனிய இசையினை உடைய விழாமுரசின்
முழக்கத்தைக் கேட்ட துணையானே, பெரிது இனிய மெய் கேட்டாம் - யாம் மிக்க இனிமை
பயப்பதொரு மெய்ப் பொருளைக் கேட்டோம், நம்மிறைவன் - நம் மன்னனாகிய பயாபதி
வேந்தன், நங்கள் வாழ்நாள் மன்னிய வாழ்க - தன் வாழ்நாள்களோடு எம்முடையவாக
நிலை பெற்ற வாழ்நாள்களையும் ஒருங்கே தன்னுடையனவாகப் பெற்று வாழ்வானாக,
என்னா - என்று, பொன்இயல் மலரும் - பொன்னிறமமைந்த மலர்களும், சாந்தும் -
நறுமணக் குழம்புகளும், சுண்ணமும் - நறுமணப் பொடிகளும், புகையும் - நறுமணப்
புகைகளும், பொங்க - மிக்குக் கமழா நிற்ப, துன்னிய நகரமாந்தர் - குழீஇய போதன
நகரத்து மக்கள், துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் - சுவர்க்க நாட்டை இவ்வுடலோடு
எய்தியவர்களை ஒத்து மகிழ்ந்தனர், (எ - று.)

     “யான் வாழும் நாளும் பண்ணன் வாழியÓ என்னும் வாக்கை ஈண்டு ஒப்பு நோக்குக.
நகர மாந்தர் விழா முரசங்கேட்டு மெய் பெரிது இனிய கேட்டாம் என்று வாழ்க என்னாப்
பொங்கத் துறக்கம் பெற்றவர்கள் ஒத்தார் என்க.

(739)

 

நகரம் அணி செய்தல்

வேறு
1870. பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ
காரணி கடலொலி 1கைத விர்த்ததே.
 
     (இ - ள்.) பூரண மணிக்குடம் நிரைத்த - மணிகள் பதிக்கப்பட்ட நிறை குடங்கள்
நிரலாக வைக்கப்பட்டன, பொன் அணி தோரணம் எடுத்தன - பொன்னிறமான அழகிய
தோரணங்கள் உயர்த்தப்பட்டன, வெண்கொடி துதைந்த - வெண்பட்டாலாய கொடிகள்
செறிக்கப்பட்டன, வார் அணி முரசொடு வளைகள் ஆர்த்து - வாராற் கட்டப்பட்ட அழகிய
முரசங்களோடே சங்கங்கள் முழங்கி, கார் அணி கடல் ஒலி - கரியதாய் அழகுடைய
கடலினது முழக்கத்தைக், கைதவிர்த்ததே - மிகவும் மறைத்தன,
(எ - று.)

     பூரண குடங்கள் நிரைக்கப்பட்டன; தோரணமெடுக்கப்பட்டன; முரசொடு வளைகள் முழங்கிக் கடலொலி தவிர்த்தன என்க.

 (740)

 

     (பாடம்) 1 கை கவித்ததே, கைதவித்ததே.