பக்கம் : 1164
 

இதுவுமது

1871. விரையினான் மெழுகிய வீதி வாயெலாம்
திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார்
உரையினா லென்னையவ் வொளிகொண் மாநகர்
புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே.
 
     (இ - ள்.) விரையினால் மெழுகிய வீதிவாய் எலாம் - மணச் சாந்தாலே மெழுகப்பட்ட
வீதியிடமெங்கும், திரையின் ஆர் செழுமணி முத்தம் சிந்தினார் - கடலிலே
தோன்றுவனவாய செழிப்புடைய மணியாகிய முத்துக்களைத் தூவினார், உரையினால்
என்னை - அவ்வழகைக் காட்டச் சொற்களால் ஆகக்கடவதென்னை, அவ்வொளிகொள்
மாநகர் - அந்த ஒளிமிக்க போதன மாநகரம், புரையினால் - உவமையால் (ஒருவாறு
கூறுமிடத்தே), பொன்னுலகு - தேவர் உலகம், இழிந்தது ஒத்ததே - இப்பூமியில்
இறங்கியதனை ஒத்திருந்தது (என்னலாம்), (எ - று.)

     வீதிகள்தோறும் விரையினால் மெழுகி முத்தஞ்சிந்தினார், அவ்வொளிகொள் மாநகர்
வானுலகம் மண்ணின்மேல் இறங்கியதனை ஒத்திருந்தது.

(741)

 

இதுவுமது

1872. கழுமிய காழகி லாவி 1காமரு
செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது
விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத்
தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே.
 
     (இ - ள்.) கழுமிய காழ் அகில் ஆவி - திரண்ட காழ்ப்புடைய அகிற்புகை, காமரு -
விரும்புதற்குக் காரணமான, செழுமணி மாளிகை - செழிப்புடைய மணிகள் பதித்த மாட
மாளிகைகளின், சென்னி சூழ்வது - முடியிலே தவழ்வது, விழுமணி விளங்கிய விலங்கல்
மீமிசை - சிறந்த மணிகள் திகழ்கின்ற மலையின் உச்சியிலே, தழுவிய இளமழை தவழ்வது
ஒத்ததே - பொருந்திய வெண்மேகங்கள் தவழ்வதை ஒத்திருந்தது, (எ - று.)

     இளமழை - வெண்முகில்.

     அகிற்புகை மாளிகையின் சென்னிகளிலே சூழ்வது முகில்கள் மலைகளின் மேல் தவழ்வதை ஒத்திருந்தது.

(742)

 

     (பாடம்) 1 காமருஞ்.