பக்கம் : 1165 | | அந்தணர் வெள்ளணி பூண்டு விழவிற் கெழுதல் | 1873. | வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித் தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார் வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும் கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார் | (இ - ள்.) வெண்துகில் உடுத்து - வெண்மை நிறம் அமைந்த ஆடைகளையே உடுத்துக்கொண்டு, வெண்சாந்து மெய்வழித்து - வெண்ணிறமமைந்த சந்தனத்தையே உடலில் நீவிக்கொண்டு, ஒண் திரள் மல்லிகை ஒலியல் சூடினார் - ஒள்ளிய திரட்சியமைந்த மல்லிகை மலராலாய வெண்மலர் மாலையைப் புனைந்து கொண்டு, வண்திரள் மணிமுத்தும் வயிரச் சாதியும் கொண்டு இயல் அணியொடும் கோலந் தாங்கினார் - அணிகலன் களுள் வைத்தும் வளமுடையவாய்த் திரண்ட மணியாகிய முத்துக்களையும் வயிரமணி வகைகளையுமே கொண்டு இயன்ற வெண்மை நிறமான அணிகலன்களையே அணிந்து தம்மை அழகு செய்துகொண்டனர், (எ - று.) வேதியர் வெளிய ஆடையுடுத்து வெண்சாந்து பூசி மல்லிகை மாலை சூடி வெண்ணிற மணியணிகள் பூண்டு எல்லாவற்றானும் வெண்மை யுடையராய் ஒப்பனை செய்து கொண்டனர் என்க. | (743) | | இதுவுமது | 1874. | வெண்மருப் பிரட்டைய வேழ மீமிசைக் கண்மருட் டுறுப்பன கமலப் பூப்பலி விண்மருட் டுறுப்பன வேந்தி வேதியர் மண்மருட் டுறுப்பதோர் வகையின் மன்னினார். | (இ - ள்.) வெண்மருப்பு இரட்டைய வேழம் மீமிசை - வெண்மையான கோடுகளையுடைய இரண்டாகிய யானைகளின் எருத்தத்தின்மேல், கண் மருட்டுறுப்பன - கட்பொறியை வியக்கச் செய்வனவாகிய, கமலப் பூப்பலி - வெள்ளைத் தாமரைப் பூவாகிய கடவுட்கிடும் பலி, விண் மருட்டுறுப்பன - ஏந்தி - தேவர்கள் வியக்குமாறு விளங்குவனவற்றைத் தாங்கியவராய், மண் மருட்டுறுப்பதோர் வகையின் - இம்மண்ணுலகம் மருள்வதற்குக் காரணமானதொரு முறையோடே, வேதியர் மன்னினார் - அந்தணர்கள் நிலைபெற்றனர், (எ - று.) ஏனையவற்றிற்கு இயைய வெண்கமலப்பலி என்க. | |
| | | |
|
|