பக்கம் : 1167
 

     மேலும் அரசர்கள் செங்கழுநீர் மலர்மாலை அணிந்து செந்நிற ஆடையுடுத்து
செந்நிறமுடையவனவாக ஒப்பனை செய்யப்பட்ட யானைகளிலே ஏறிப் பூப்பலியோடே
தோன்றினர் என்க.

(746)
 
வணிகர் பொன் அணி அணிந்து வருதல்
1877. பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் 1சுண்ணமொய்
மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
டின்மல ரிருநிதிக் கிழவ ரீண்டினார்.
 
     (இ - ள்.) பொன்மலர்க் கண்ணியர் - பொன்னாலியன்ற மலர்மாலையை முடியின்
உடையராய், மொய்மின் மேனிமேல் - செறிந்த ஒளிதிகழும் தம்முடலின்மேல், பொன்செய்
சுண்ணம் - பொன்னாற் செய்யப்பட்ட பொடியை, விளங்க அப்பினார் - திகழும்படி
திமிர்ந்தவராய், மென்மலர் அணிநகை மிளிரும் கோலமோடு - மெல்லிய மலராலாய
மாலைகளும் அணிகலன்களும் திகழ்கின்ற எழிலோடே, இன்மலர் இரு நிதிக் கிழவர்
ஈண்டினார் - இனிதே பெருகும் பெரிய செல்வராய வணிகர்கள் குழீ இயினார், (எ - று.)

     மலரிருநிதி : வினைத்தொகை.

     வணிகர் பொன்னிற மலர்மாலை யணிந்து பொற்சுண்ணம் அப்பி பொன்னிறமே
திகழ ஈண்டினர் என்க.

(777)

 
இதுவுமது
1878. பேரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
2போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
வாரணி வனமுலை யவரொ டென்பவே.
 
     (இ - ள்.) பேர் ஒளிப் பீதக வுடையர் - மிக்க ஒளியை உடைய பொன்னாடையை
உடுத்தியவராய், பைம்பொனால் ஆர் ஒளி தழுவிய பூப்பலி - பசிய பொன் ஒளியாலே
தழுவப்பட்ட மலராற் செய்தற்குரிய பூப்பலியை, போர் ஒளி யானைமேல் - போரிடத்தே
புகழுடைய யானையின் பிடரின்மேல், நிரைத்துப் போந்தனர் - நிரலாக வைத்துக்கொண்டு
வருவாராயினர், வாரணி வனமுலை அவரொடு என்பவே - கச்சணிந்த அழகிய
முலைகளையுடைய தம் மகளிர்களுடனே, என்று கூறுவர் சான்றோர், (எ - று.)
 

     (பாடம்) 1 சுண்ணமேய். 2 பேரொளி