பக்கம் : 117
 
தூய ஆம் முறுவல் - தூயனவாகிய பற்களையும்; துவர் வாயவள் - சிவந்த வாயினையும்
உடையவளும்; வளர்கொம்பு அனாள் - வளரா நின்ற பூங்கொம்பு போன்றவளும் ஆகிய;
வாயுவேகை என்பாள் - வாயுவேகை என்னும் பெயரையுடைய நங்கை; விளங்கினாள் -
பொருந்தித் திகழாநின்றாள், (எ - று.)

     மாயம் - பொய். மாய்தல் - இல்லையாதல். பொய்கெட எனவே மெய் தழைக்க
என்றாராயிற்று. ஈண்டுப் பொய்ம்மை மெய்மைகள், தீமை நன்மைகளின் மேனின்றன.
சுவலனசடி மன்னன் வாயுவேகை என்பவளை வாழக்கைத் துணையாகப் பெற்றிருந்தனன்;
அவள் அழகு மிக்கவள் என்பது கருத்து.
 

( 28 )

வாயுவேகையின் மேன்மை

147. பைம்பொற் பட்ட மணிந்தகொல் யானையான்
1அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினாள்.
 

     (இ - ள்.) செம்பொன்பட்டம் செறிந்த - சிவந்த பொன்னினாலாகிய பட்டம்
பொருந்திய; திருநுதல் - அழகிய நெற்றியையும்; அம் பொன்பட்டு உடையாள் - அழகிய
பொன் பட்டாடையை உடையவளுமான அந்த வாயுவேகை என்பவள்; பைம்பொன் பட்டம்
அணிந்த கொல் யானையான் - பசிய பொன்னினால் ஆகிய பட்டத்தை
நெற்றியிலணிந்ததும் கொலைத் தொழிலையுடையதுமான யானையையுடைய
சுவலனசடியரசனின்; அம்பொன் பட்டம் நறுங்குழலார்க்கு எலாம் - அழகிய நெற்றிப்
பட்டத்தையணிந்தவர்களும் மணந்தங்கிய கூந்தலையுடையவர்களுமான மனைவியர்கள்
எல்லோருக்கும்; அணி ஆயினாள் - அணிகலன்போலச் சிறந்து திகழ்ந்தாள், (எ - று.)

     “பட்டம்“ என்ற சொல் ஒரு பொருளில் மும்முறை வந்தது, சொற்பொருட்பின்
வருநிலை. அவ்வரசனுடைய பட்டத்துத் தேவியர் அனைவருள்ளும் வாயுவேகை சிறந்து
நின்றனள் என்க.
 

( 29 )


     (பாடம்) 1. நம்பப்பட்ட.