பக்கம் : 1172
 
 
1887. பாடுவா 1ர் பலாண்டிசை பரவு வார்பரந்
தாடுவா ரறிவனைப் பரவி யார்களும்
கூடுவார் குழவுமெய் குழுமி யெங்கணும்
ஊடுதான் வியலிட முள்ள தில்லையே.
 
     (இ - ள்.) அறிவனைப் பரவி - அருகபரமேட்டியை வாழ்த்தி, யார்களும் -
எத்திறத்தாரும், பரந்து ஆடுவார் - பரவி நின்று அன்புமிகுதியானே ஆடுவாருமாய்,
பலாண்டு இசைபாடுவார் - இசையானே பல்லாண்டு பாடுவாருமாய், பரவுவார் -
வணங்குவாருமாய், கூடுவார் - கூடுகின்றவர்களுடைய, மெய்குழுமி - உடல்கள் நெருங்கி,
ஊடுதான் - உள்ளிடத்தே, வியல்இட முள்ளது இல்லை - சிறிதும் வெற்றிடம்
இல்லையாயிற்று, (எ - று.)

     வியல் - மிகுதி - மிகுந்த இடம் எனவே வெற்றிடம் என்றாம்.

     யார்களும் - யாவர்களும், வகரம் கெட்டது.
பாடுவார், பரவுவார் ஆடுவார் கூடுவார் குழுமி வெற்றிடம் இல்லையாயிற்றென்க.

(787)

 
1888. நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி
செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்
கிவ்வகை யெழுவகை விழவு 2செல்வுழி
நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே.
 
     (இ - ள்.) நொவ் வகை வினைப்பகை அகற்றி - உயிர்களின் துயரங்கட்குக்
காரணமான பல்வேறு வகையாய வினையாகிய பகையை அகலச் செய்து, நூல் நெறி
செவ்வகை மொழிந்தவன் - பரம ஆகமத்தின் வாயிலாய் வீட்டுநெறியை நன்கு
விளக்கியருளியவனாகிய அருகக்கடவுளின், செல்வச் சேவடிக்கு - முத்தி இன்பமாகிய
அழியாத செல்வத்தை அடியார்க்கு நல்கும் செவ்விய திருவடிகட்கு, இவ்வகை எழுவகை
விழவு - இவ்வாறு எழாநின்ற பலவகைப்பட்ட திருவிழா, செல்வுழி - நிகழுமிடத்தே,
நெய்வகை வேலவன் - நெய்பூசப்படும் முறைமைத்தாய வேலையுடைய பயாபதி மன்னரின்,
நிலைமை கேட்கவே - நிலைமையினை இனி யாங் கூறக் கேளுங்கள்.

     வினைப்பகை அகற்றி, மொழிந்தவன் சேவடிக்கு, இவ்வகை விழவு செல்வுழி,
பயாபதியின் நிலைமையை, யாம் கூறுவேம், கேண்மின் என்று தேவர் கூறினர் என்க.

(788)

 

     (பாடம்) 1 ரெண்டிசை. 2செல்வழி.