பக்கம் : 1174
 

பயாபதியின் கடவுட் காட்சி

1891. மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப்
பொன்னணி வளநக ரத்துப் பொங்கரி
துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ
டன்னண 1மசோகம ரடிக டோன்றினார்.
 
     (இ - ள்.) அன்னணம் மன்னவன் அணைதலும் - அவ்வாறு பயாபதி மன்னன்
எய்தியபொழுது, மலர்ந்த வாள்நிலா பொன் மணி அணி வளநகரத்து - விரிந்த
ஒளிச்சுடருடன் பொன்னால் அழகு செய்யப்பட்ட வளமுடைய திருக்கோயிலின்கண்,
பொங்கு அரி துன்னிய அணைமிசை - சினமிக்க சிங்கம் பிடரிற் றாங்கப் பட்ட
அணையில் மேல், துளங்கும் சோதியோடு - மிளிருகின்ற ஒளியுடனே, அசோகு அமர்
அடிகள் தோன்றினர் - அசோகமரத்தின் நீழலிலே வீற்றிருக்கும் அருகக்கடவுள்
காட்சியருளினர்,
(எ - று.)

     பயாபதி மன்னன் கோயிலுட் சென்று அரியணையில் சோதியோடு தோன்றிய அடிகளைக் கண்டனன் என்க.

(781)

 

அருகக்டவுள் அமர்ந்த அணையின் சிறப்பு

1892. குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய
மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே.
 
     (இ - ள்.) குஞ்சரத் தடக்கைய குழவிச் சென்னிய - யானையின் பெரிய கையையும்
குழவியாகிய களபத்தினது தலையையும் உடையதாயும், மஞ்சிவர் தோற்றத்து - முகில்கள்
தவழும் உயர்ந்த தோற்றத்துடன், மகரவாயொடு - மகரமீனின் வாய்களுடன், செஞ்சுடர்
மணிநிரை அழுத்தி - செவ்விய சுடருடைய மணிகளை வரிசையாகப் பதித்து,
செம்பொனால் அம்சுடர் உமிழ்வது - செம்பொன்னாலியற்றப் பட்டமையால் அழகிய
ஒளிகால்வதாம், அவ்வணையின் வண்ணமே - அவ்வடிகள் அமர்ந்த திரு அணையின்
தன்மை,  (எ - று.)

     தடக்கையை யுடையதும் சென்னியை உடையதும் ஆகி மரகவாயோடு மணி
நிரையழுத்திச் சுடருமிழ்வது அவ் வணையின் வண்ணம் என்க.

(782)

 

     (பாடம்) 1 அசோகமர்ந்தடிக.