பக்கம் : 1189
 

அப் பொன்மண்டபத்தே பயாபதி மன்னன்
ஒரு துறவியைக் கண்டு வணங்கல்

1914. ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந்
தாங்கிய மாமலை யன்ன தகையவன்
பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி
தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான்.
 
     (இ - ள்.) ஆங்கு ஓர் முனிவன் அருந்தவப் பல்குணம் தாங்கிய மாமலை அன்ன
தகையவன் - அப் பொன் மண்டபத்தின் கண்ணிருந்த செயற்கருந் தவத்திற்கியன்ற
பலவாகிய பண்புகளை உடைய சிறந்த மலைபோலும் தகுதியுடையான் ஒரு துறவியின்,
பூங்கமழ் சேவடிப்போது - அழகிய மணங்கமழ்கின்ற சிவந்த மலர்போன்ற அடிகளை, தன்
பொன்முடி தாங்கிய தாமநுதியால் - பயாபதி வேந்தன் தனது பொன்னாலியன்ற
முடியின்மிசை சூட்டப்பட்டுள்ள மலர்மாலையின் நுனியாலே, துடைத்தான் - துடைத்தனன்,
(எ - று.)

     முடியின் அணிந்த மாலை அம்முனிவன் அடியிற் றோய, பயாபதி மன்னன்
அத்துறவியின் அடியில் வீழ்ந்து வணங்கினான், என்றபடி.

     அருந்தவப் பல்குணம் என்றது பரஹ்ய தவப்பண்புகளை. அவையாவன:- அனசனம்,
ஆவமோதர்யம், விருத்தி பரிசங்க்யானம் இரச பரித்தியாகம், விவிக்தசய்யாசனம்,
காயக்லேசம், என்பன. துளக்கமின்மையான் மாமலை அன்னதகையன் என்க.
 

(804)
 

 

அத்துறவியின் வாழ்த்துப்பெற்று பயாபதி அமர்தல்

1915. ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான்.
 
     (இ - ள்.) ஆற்றில் அமைந்த அருந்தவத்தால் - துறவறத்தார்க்குரிய நெறியென
மெய்ந்நூல்களால் வரையறை செய்யப்பட்ட வழியிலே நின்றியற்றிய செயற்கரிய
தவவொழுக்கத்தாலே, வினை ஊற்றுச் செறித்த - வினைகள் தோன்றும் வழிகளை
அடைத்தொழித்த, ஒரு பெயர் மாதவன் - ஒப்பற்ற புகழ் உடைய
அப்பெருந்துறவியினுடைய, மாற்று அருமந்திர வாய்மொழி - அருளிக்கூறினும் வெகுண்டு
கூறினும் தம் பயனைப் பயந்தே விடுதலை ஒருவரானும் மாற்றற்கு இயலாத ஆற்றலுடைய
மறைமொழியாகிய மெய்ம்மொழியை, ஆயிடை - அப்பொழுது, ஏற்பனகொண்டு - தன்
தகுதிக்கேற்ப, அம்முனிவரன் மொழிந்தவற்றை மேற்கொண்டு, ஆங்கு - அவ்விடத்தே,
இறைவன் இருந்தான் - பயாபதி மன்னன் அமர்ந்தான், (எ - று.)